'கேம் சேஞ்சர்' படத்தின் டிக்கெட் விலை உயர்வை திரும்பப் பெற்றது தெலங்கானா அரசு

ராம் சரண் நடித்த ‘கேம் சேஞ்சர்’ படத்தின் கூடுதல் கட்டண உத்தரவை தெலங்கானா அரசு திரும்பப் பெற்றது.
'கேம் சேஞ்சர்' படத்தின் டிக்கெட் விலை உயர்வை திரும்பப் பெற்றது தெலங்கானா அரசு
Published on

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம் சரண், எஸ்.ஜே. சூர்யா, நடிகை கியாரா அத்வானி நடிப்பில் உருவாகியுள்ள 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ளார். இயக்குநர் ஷங்கரின் முதல் நேரடி தெலுங்குப் படமாக இந்தப் படம் கடந்த 10-ம் தேதி வெளியானது. 'கேம் சேஞ்சர்' படத்தின் தயாரிப்பாளர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, தெலங்கானாவில் ஜனவரி 10ம் தேதி மட்டும் 6 காட்சிகள் திரையிட அனுமதிக்கப்பட்டது.

முதல்நாளில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் கூடுதலாக ரூ. 150 வசூலிக்கவும், ஒற்றை திரையரங்குகளில் கூடுதலாக ரூ. 100 வசூலிக்கவும் அனுமதிக்கப்பட்டது. தொடர்ந்து, ஜனவரி 11 முதல் 19 வரையிலான 9 நாள்களில் (5 காட்சிகள்) மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் கூடுதலாக ரூ. 100 கட்டணமும், ஒற்றைத் திரையரங்குகளில் ரூ. 50 கூடுதல் கட்டணமும் வசூலிக்க அனுமதிக்கப்பட்டது. மேலும், போதைப்பொருள் தடுப்பு மற்றும் சைபர் குற்றங்களின் தாக்கம் குறித்த விளம்பரங்கள் திரையிடப்பட வேண்டும் என்று தெலங்கானா அரசு கூறியிருந்தது. இதனையடுத்து, திரையரங்குகளில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தின் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, டிக்கெட் விலை உயர்வைக் கண்டித்து, தெலங்கானா அரசை காங்கிரஸார் விமர்சித்தனர். இந்த நிலையில், திரையரங்குகளுக்கு கூடுதல் கட்டணம் குறித்த அளிக்கப்பட்ட உத்தரவை தெலங்கானா அரசு ரத்து செய்தது. மேலும், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பொது நலன், சுகாதாரம், பாதுகாப்பு முதலானவற்றை கருத்தில்கொண்டு, எதிர்காலத்தில் அதிகாலை காட்சிகள் அனுமதிக்கப்படாது என்றும் தெலங்கானா அரசு கூறியுள்ளது.

'கேம் சேஞ்சர்' படம் முதல் நாளில் ரூ. 186 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com