

சினிமாவில் நடிப்பதற்காக வீட்டைவிட்டு ஓடிவந்து விட்டதாக இளம் நடிகை பரபரப்பு தகவலை வெளியிட்டு உள்ளார். அவரது பெயர் நிரிஷா பாஸ்னெட். இவர் இந்தி படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.
நிரிஷா அளித்துள்ள பேட்டியில், எனது சொந்த ஊர் நேபாளத்தில் உள்ள காத்மாண்டு. எனக்கு சிறிய வயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் வீட்டில் ஆதரவு இல்லை. இதனால் வீட்டை விட்டு மும்பைக்கு ஓடி வந்து விட்டேன். மும்பையில் எனக்கு யாரையும் தெரியாது. ஆனாலும் கையில் கொஞ்சம் பணம் இருந்ததால் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு காத்து இருந்தேன். அது வீண் போகவில்லை. தொலைக்காட்சிகளில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதன் பிறகு பிரபலமான நடிகையாகி விட்டேன்.
நான் நடித்த முதல் கதாபாத்திரத்தை என்னால் மறக்க முடியாது. எனது உண்மையான குணாதிசயம் போலவே அந்த கதாபாத்திரமும் அமைந்தது. ஆரம்பத்தில் மும்பையில் எனக்கு யாரும் அறிமுகம் இல்லாமல் இருந்தாலும் என்மீது நான் வைத்த நம்பிக்கையால்தான் நடிகையாகி இந்த அளவுக்கு உயர்ந்து இருக்கிறேன் என்றார்.