நடிகர் யோகி பாபுவின் படப்பிடிப்பு தளத்தில் நடந்த சண்டை ... வழக்குப்பதிவு செய்த போலீசார்

குரங்கணி சுற்று வட்டார பகுதிகளில் யோகி பாபு நடிக்கும் மலையோரம் வீசும் காற்று என்ற படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
நடிகர் யோகி பாபுவின் படப்பிடிப்பு தளத்தில் நடந்த சண்டை ... வழக்குப்பதிவு செய்த போலீசார்
Published on

குரங்கணி,

நடிகர் யோகி பாபுவின் உதவியாளரும், கார் டிரைவரும் திடீரென்று படப்பிடிப்பு தளத்தில் மோதிக்கொண்டதில் யோகி பாபுவின் உதவியாளர் காயம் அடைந்தார். போடிநாயக்கனூர் குரங்கணி, கொட்டகுடி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் மலையோரம் வீசும் காற்று என்ற படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இதில் காமெடி நடிகர் யோகி பாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு மேல் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் குரங்கணி மலைப்பகுதியில் படம் பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று குரங்கணி பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது யோகி பாபுவின் உதவியாளர் சேலம் பொன்னம்மாப்பேட்டை யைச் சேர்ந்த சதாம் உசேன்(35), மற்றும் யோகி பாபுவின் கார் டிரைவர் சென்னை ஆழ்வார்திருநகரை சேர்ந்த ராமச்சந்திரன் (31) ஆகிய இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒருவருக்கொருவர் ஆவேசமாக திட்டிக்கொண்டு திடீரென்று கைகலப்பில் ஈடுபட்டனர். இருவரும் மோதிக் கொண்டதில் யோகி பாபுவின் உதவியாளர் சதாம் உசேனை கார் டிரைவர் ராமச்சந்திரன் மூக்கில் குத்தியதால் ரத்தக் காயம் ஏற்பட்டதாக யோகி பாபுவின் உதவியாளர் சதாம் உசேன் குரங்கணி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனையடுத்து குரங்கணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். படப்பிடிப்பில் நடந்த எதிர்பாராத இந்த மோதல் சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com