

சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு, பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்து வரும் புதிய படம், 'அரசன்'. இந்த படம் வட சென்னை பின்னணியில் கேங்க்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஆண்ட்ரியா, சமுத்திரகனி, விக்ராந்த், கிஷோர், சைத்ரா ஆர்ச்சர் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் மதுரையில் நடைபெற்று நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாதத் தொடக்கத்தில் படப்பிடிப்பை நிறைவு செய்ய படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் பின்னணிப் பணிகள் தொடங்கப்படவுள்ளன. இப்படத்தை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அரசன் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் தொடர்பா தகவல் கிடைத்துள்ளது. அதாவது, அரசன் படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன் ‘சேதுபதி’, ‘செக்கச் சிவந்த வானம்’, ‘டி.எஸ்.பி’ ஆகிய படங்களில் போலீஸ் வேடத்தில் நடித்திருந்த அவர், மீண்டும் அதே மாதிரியான கதாபாத்திரத்தில் நடிப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.