

‘ராயன்’ படத்துக்கு தேசிய விருது கிடைத்தது தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில் நடிகர் தனுஷ் விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்தில் 72-வது தேசியத் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தனுஷின் கேப்டன் மில்லர் மற்றும் ராயன் படங்களுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதில் ராயன் படத்திற்கு அறிவிக்கப்பட்டது மிகப்பெரிய விவாதத்திற்கும், சர்ச்சைக்கும் வழிவகுத்தது.
காரணம் ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்ட 'மகாராஜா', 'வாழை', 'மெய்யழகன்' போன்ற தகுதியான படங்கள் இருக்கும் போது, சராசரி விமர்சனங்களைப் பெற்ற 'ராயன்' படத்திற்குச் சிறந்த தமிழ்ப் படம் விருது கொடுக்கப்பட்டது ஏன் என கேள்விகள் எழுந்தன.
மேலும் 'தங்கலான்' படத்திற்காக நடிகர் விக்ரம் தனது உடல் அமைப்பையே மாற்றி, மிகக் கடுமையான உழைப்பைக் கொடுத்திருந்தார். அவருக்கு இந்த முறை நிச்சயம் சிறந்த நடிகருக்கான விருது கிடைக்கும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில், அவருக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் தனுஷின் ‘ராயன்’ படம் குறித்து விவாதம் அதிகரித்தது. இதுதொடர்பான மீம்ஸ்களும் இணையத்தை ஆக்கிரமித்தன. இந்த விமர்சனங்களுக்கு தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவும் விளக்கமளித்திருந்தார்.
நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு பெரியபாளையம் அருகே, அவரது ரசிகர் மன்றம் சார்பில் ரத்த தானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில் நடிகர் கலந்துகொண்டு பேசினார்.
இந்நிலையில் ‘ராயன்’ படத்துக்கு தேசிய விருது கிடைத்தது தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில் நடிகர் தனுஷ் விளக்கம் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அவர் “ராயனுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. ராயன் வெளியான வருடத்தில் பல நல்ல படங்கள் வெளியாகின. அதன் ரசிகர்களின் அதற்கான அதிருப்தியை வெளிப்படுத்தினர். அதை மதிக்கிறேன். புதுப்பேட்டை, வடசென்னை, மயக்கம் என்ன, மரியான் போன்ற படங்களுக்கு தேசிய விருது கிடைக்கும் என தெரிவித்தார்கள். ஆனால் கிடைக்கவில்லை. அப்போது யாரும் ஏன் தேசிய விருது கொடுக்கவில்லை என கேட்கவில்லை. ‘ராயன்’ திரைப்படத்துக்கு தேசிய விருது தானாக கிடைத்தது. தமிழனாக எனக்கு மேலும் 2 தேசிய விருது கிடைத்துள்ளது. தட்டிவிடாமல் என்னை தட்டிக்கொடுங்கள்” என்றார்.