

கொரோனா பரவலால் தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளன. இதனால் புதிய படங்களை ஓ.டி.டி. தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். ஓ.டி.டி.யில் படங்களை வெளியிடுவதை தியேட்டர் அதிபர்கள் விரும்பவில்லை. ஆனால் நடிகர், நடிகைள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஓ.டி.டி. தளங்களுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் மலையாள திரைப்படங்களுக்காக தனி ஓ.டி.டி. தளம் உருவாக்கப்படும் என்று கேரள அரசு அறிவித்து உள்ளது. இந்த ஓ.டி.டி. தளம் நவம்பர் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதனை டைரக்டர் சேரன் வரவேற்றதுடன் அதுபோன்று தமிழ் படங்களுக்கும் தனி ஓ.டி.டி. தளத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் சேரன் வெளியிட்டுள்ள பதிவில், இதுபோன்ற முயற்சி நமது தமிழ் திரைப்படத்துறைக்கும் தமிழக அரசால் உருவாக்கப்பட வேண்டும். சிறு முதலீட்டு மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களுக்கு இதன் மூலமே விடிவு காலம். அரசுக்கும் வருமானம் கிடைக்க வாய்ப்பு அதிகம். தமிழ்மொழிக்கென தனி ஓ.டி.டி. தளம் அவசியம்'' என்று கூறியுள்ளார்.