

சென்னை,
சென்னையில் நடந்த ‘ஐ அம் கேம்’ பட விழாவில் துல்கர் சல்மான் பங்கேற்று பேசும்போது, இத்திரைப்படம் முழுமையான கமர்ஷியல் பொழுதுபோக்கு படம். இதில் காமெடி, ரொமான்ஸ், மர்மம், சஸ்பென்ஸ், ஆக்ஷன், திரில்லிங், கேமிங் என ரசிகர்களை கவரும் அத்தனை அம்சங்களும் உள்ளன. என்றார்
மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் 'ஐ அம் கேம்'. 'ஆர்.டி.எக்ஸ்' படப்புகழ் நஹாஸ் ஹிதாயத் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் துல்கர் சல்மானுடன் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த்திவ் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் உலகம் முழுவதும் இன்று திரைக்கு வருகிறது. இதனை முன்னிட்டு சென்னையில் நடந்த பட விழாவில் துல்கர் சல்மான் பங்கேற்றார். அவர் பேசும்போது, “எந்த படத்தின் விழாவுக்காக சென்னை வந்தாலும் என் மனதில் மகிழ்ச்சி குடிகொள்ளும். ஏனெனில் சென்னைக்கு எனக்குமான உறவு உணர்வுப்பூர்வமானது. இந்த சென்னையை என்னால் மறக்கவே முடியாது. எனது சிறுவயது பருவத்தின் பெரும்பகுதியை சென்னையில் கழித்திருக்கிறேன்.
'ஐ அம் கேம்' திரைப்படம் முழுமையான கமர்ஷியல் பொழுதுபோக்கு படம். இதில் காமெடி, ரொமான்ஸ், மர்மம், சஸ்பென்ஸ், ஆக்ஷன், திரில்லிங், கேமிங் என ரசிகர்களை கவரும் அத்தனை அம்சங்களும் உள்ளன. தமிழ் ரசிகர்களுக்கு என்றுமே நான் கடமைப்பட்டுள்ளேன். இங்குள்ள ரசிகர்களின் ஆதரவு எனக்கு இருக்கும் என்பதில் எப்போதுமே நம்பிக்கை உண்டு. ஒவ்வொரு முறையும் தமிழகம் வரும்போதெல்லாம் நம்பிக்கையுடனேயே வந்து செல்கிறேன்” என்றார்.
கதிர் பேசுகையில், 'இந்த படத்திற்கு பின்னால் மிகப்பெரிய உழைப்பும், நம்பிக்கையும் இருக்கிறது. குறிப்பாக, புதிய கதைகள் மற்றும் வித்தியாசமான முயற்சிகளில் ரிஸ்க் எடுக்கும் துல்கர் சல்மானின் சினிமா மீதான ஆர்வம் மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது" என்று குறிப்பிட்டார்.