

சென்னை,
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் பணிகளை முடித்துள்ள ரஜினிகாந்த், அடுத்ததாக தனது 173-வது திரைப்படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.
தற்காலிகமாக ‘தலைவர் 173’ என அழைக்கப்படும் இந்தப் படத்தை முதலில் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது ‘ஓ மை கடவுளே’ மற்றும் ‘டிராகன்’ படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இந்தப் படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். மேலும், பிரபல இயக்குநர் ஷங்கர் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், மலையாள நடிகர் பாசில் ஜோசப் ரஜினிகாந்தின் மகனாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ‘தலைவர் 173’ படம் தொடர்பான புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. ரஜினிகாந்தை மையமாகக் கொண்ட சிறப்பு அதிரடி பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் பாடலுக்கு பிரபல நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் நடன அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் மாத இறுதி அல்லது ஜூலை மாத தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.