

சென்னை,
இயக்குநர் அட்லீ சொல்லும் அரசியல் கற்றல் என்பது அடுத்த தலைமுறைக்கு ஆபத்தையே விளைவிக்கும்.. என இயக்குநரும், நடிகருமான போஸ் வெங்கட் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அட்லீ, முதல்அமைச்சர் விஜய் மற்றும் தமிழக அரசியல் குறித்து பேசிய கருத்துகள் தற்போது கவனம் பெற்றுள்ளன.
விழாவில் பேசிய அட்லீ, தான் தற்போது அடைந்துள்ள வளர்ச்சிக்கு தனது உழைப்பு முக்கிய காரணமாக இருந்தாலும், விஜய் வழங்கிய வாய்ப்புகளும் தனது பயணத்தில் முக்கிய பங்கு வகித்ததாக அவர் கூறினார். ‘ராஜா ராணி’ திரைப்படத்தின் மூலம் தனக்கு அடையாளம் கிடைத்ததாகவும், அதன்பிறகு விஜய் தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கியதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து அரசியல் குறித்தும் பேசிய அட்லீ, அடுத்த தலைமுறை அரசியலில் விஜய்க்கு முக்கிய பங்கு இருப்பதாக தெரிவித்தார். அதேவேளையில், தான் அரசியல்வாதி இல்லை என்றும், தனக்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போது சட்டசபையில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்த தகவல்கள்கூட குழந்தைகள் அறிந்து கொள்ளும் அளவுக்கு சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் கிடைத்து வருவதாகவும் கூறினார். எனவே, “அரசியல் நமக்கானது அல்ல” என்று ஒதுங்கி நிற்க முடியாது என்றும், அரசியல் என்பது அனைவருக்கும் தொடர்புடையது என்றும் அட்லீ தெரிவித்தார்.
இந்த நிலையில், இயக்குநர் அட்லீ சொல்லும் அரசியல் கற்றல் என்பது அடுத்த தலைமுறைக்கு ஆபத்தையே விளைவிக்கும்.. என இயக்குநரும், நடிகருமான போஸ் வெங்கட் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது, "அடுத்த தலைமுறை கற்றுக்கொள்ள வேண்டிய அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள் அறிஞர் அண்ணாவில் ஆரம்பித்து தளபதி மு.க.ஸ்டாலினில் முடிந்ததாக கருதுகிறேன்.. இந்த தலைமுறை தவறான அரசியலை கற்றுக்கொள்கிறது.. இது பெரிய சமுதாய சீரழிவை உண்டாக்கும்..
முதல் கோணல் முற்றிலும் கோணல் ஆகும்.. பிள்ளைகள் அறிஞர் அண்ணா, தந்தை பெரியார், காரல் மாக்ஸ். லெனின்,மாவோ.. என இவர்களை படித்து நல்ல புரட்சிகரமான கருத்துக்களை கற்றுக்கொள்ள வேண்டும்.. இயக்குனர் அட்லி சொல்லும் அரசியல் கற்றல் என்பது அடுத்த தலைமுறைக்கு ஆபத்தையே விளைவிக்கும்.." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.