நான் செய்த ஒரே தவறு, ஒரு தோல்வி படத்தை கொடுத்ததுதான் - பவன் கல்யாண்

பவன் கல்யாண் நடித்துள்ள ‘ஹரி ஹர வீரமல்லு’ படம் வருகிற 24-ந் தேதி வெளியாக உள்ளது.
நான் செய்த ஒரே தவறு, ஒரு தோல்வி படத்தை கொடுத்ததுதான் - பவன் கல்யாண்
Published on

பவர் ஸ்டார் பவன் கல்யாண் அரசியல்வாதியும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும் ஆவார். 'அக்கட அம்மாயி இக்கட அப்பா' என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். பின்னர் இவர் நடித்த படங்கள் தொடர்ச்சியாக பிளாக்பஸ்டர் படங்களாக அமைந்தன.

இவர் தற்போது ஹரி ஹர வீர மல்லு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். கிரிஷ் மற்றும் ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ள இந்த படத்திற்கு கீரவாணி இசை அமைத்திருக்கிறார். இப்படத்தில் நாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். இப்படம் வருகிற 24-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழியில் ஒரு பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி அதிக பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்தப் படத்தின் புரோமோஷன் பணிகளில் பவன் கல்யாண் பங்கேற்க மாட்டார் என இப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அறிவித்திருந்தார். ஆனால் இன்று நடைபெற்ற படத்தின் செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்துகொண்டு பலரை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். அதைத் தொடர்ந்து நேற்று மாலை நடைபெற்ற படத்தின் பிரி-ரிலீஸ் நிகழ்விலும் அவர் கலந்துகொண்டார். 

அங்கு பவன் கல்யாண் பேசுகையில், "நான் விழுந்தாலும், எழுந்தாலும், ரசிகர்கள், 'அண்ணா, நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்' என்று சொல்லி எனக்குத் தைரியம் அளிக்கிறார்கள். என் இதயத்தில் இருக்கும் ரசிகர்களைத் தவிர எனக்கு யாருமே இல்லை. நான் ஒருபோதும் பணத்திற்கு முன்னுரிமை கொடுக்கவில்லை. உறவுகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பேன். என் ரசிகர்கள் எப்போதும் என்னை ஆதரித்து வந்திருக்கிறார்கள்.

நான் நடிகனாக வேண்டும் என்று விரும்பவில்லை. சராசரி மனிதனாக வாழ வேண்டும் என்பதே என் எண்ணம். ஹரி ஹர வீரமல்லு படத்தை நான் பல சிரமங்களுக்கு மத்தியில் உருவாக்கினேன். எனக்கு பெயர் இருந்தாலும், பணம் கிடைப்பதில்லை. இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்று விரும்பினேன்.

நான் செய்த ஒரே தவறு ஒரு தோல்விப் படத்தைக் கொடுத்தது. அதன்பின் திரையுலகில் எனக்கு நிலையான இடம் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் இயக்குநர் திரிவிக்ரம் என்னைத் தேடி வந்தார். இப்படியொரு விழாவை நடத்துவதற்குப் பெரும் அழுத்தத்தை எதிர்கொண்டோம். கிட்டத்தட்ட 30 வருடங்களாக திரையுலகில் இருக்கிறேன். இந்தப் படத்தை மிகவும் கடினமான காலத்தில் செய்தேன். ஜானி படம் தோல்வியடைந்தாலும், ரசிகர்கள் என்னைக் கைவிடவில்லை" என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com