

சென்னை,
நடிகை டாப்ஸி பன்னு நடிப்பில் உருவாகியுள்ள ‘காந்தாரி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 3-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. ஆக்ஷன் மற்றும் உணர்வுப்பூர்வமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.
மனதை கொள்ளை கொண்ட டாப்ஸி பன்னு
தமிழில் வெளிவந்த 'ஆடுகளம்' படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் டாப்ஸி பன்னு. இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தியிலும் பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது 2 ஹிந்தி படங்களில் பணியாற்றி வருகிறார். நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளை தேர்வு செய்து நடித்த வருகிறார்.
அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் டாப்ஸி
தற்போது, கற்பனையான ஜெய்புரா என்ற நகரத்தை பின்னணியாகக் கொண்ட இப்படத்தில், பானி என்ற கதாபாத்திரத்தில் டாப்ஸி நடித்துள்ளார். தனது மகளைத் தேடி செல்லும் அவரது பயணம் பல்வேறு ஆபத்துகளையும் எதிர்பாராத சவால்களையும் சந்திப்பதாக கதை அமைந்துள்ளது. ‘காந்தாரி’ படத்தை தேவாஷிஷ் மக்கிஜா இயக்கியுள்ளார். கனிகா தில்லான் இப்படத்தை எழுதி தயாரித்துள்ளார்.
ஓடிடி ரிலீஸ்
இப்படத்தில் இஷ்வாக் சிங், சாயா கடம், ஸ்வஸ்திகா முகர்ஜி, மீதா வசிஷ்ட், ஜதின் சர்னா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் செப்டம்பர் 3ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரெய்லர் வெளியீடு
இந்த நிலையில், இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்று வருகிறது.