

தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக இருப்பவர் நிவேதா பெத்துராஜ். திரைத்துறையில் தினேஷ் நடிப்பில் வெளியான ‘ஒரு நாள் கூத்து’ படம் மூலம் நடிகையாக அறிமுகமான இவர், தொடர்ந்து பொதுவாக எம்மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார். கடைசியாக ஏ.எல். விஜய் இயக்கத்தில் 2023ஆம் ஆண்டு வெளியான பூ படத்தில் நடித்திருந்தார். மேலும், வெங்கட்பிரபு இயக்கத்தில் அவர் நடித்துள்ள 'பார்ட்டி' படம் நீண்ட காலமாக வெளியாகவில்லை.
இதனிடையே சமூக வலைதளங்களில் அவ்வபோது அவரது தனிப்பட்ட விஷயங்கள் மற்றும் சமூக சம்பவங்கள் குறித்து பகிர்ந்து வருவார். கடைசியாக தெரு நாய் விவகாரத்தில் நாய்களுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், பெயர் குறிப்பிடாமல் ஒரு அரசியல் கட்சியின் ஐடி-விங்கை சாடி ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில், “உங்களின் ஐடி-விங் வெறுப்பையும் தவறான தகவல்களையும் தனிப்பட்ட தாக்குதல்களையும் அதிகமாக்கிக் கொண்டிருந்தால், அந்தப் பொறுப்பு, தலைவரான உங்களையே சாரும். தலைமை என்பது பாரபட்சமானது அல்ல. தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இந்த செயல்பாடுகள் மோசமான நிலையை நோக்கிச் செல்வதாகத் தெரிகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். அவர் யாரை குறிப்பிட்டு சொல்கிறார் என்பதை வெளிப்படையாக சொல்லவில்லை. ஆனால் அவரது பதிவு வைரலாகி வருகிறது.