

ஐதராபாத்,
ஐதராபாத்தில் நடைபெற்ற ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்பட நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா, படம் குறித்தும் ரசிகர்களின் வரவேற்பு குறித்தும் பேசினார்.
நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது திரைக்கு வந்திருக்கும் படம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’. வெங்கி அட்லுரி இயக்கியுள்ள இப்படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த 14-ம் தேதி திரைக்கு வந்த இப்படம் ஓரளவு நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில், ஐதராபாத்தில் இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா பேசுகையில், "தெலுங்கு, தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா என நாங்கள் வெவ்வேறு மொழிகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும், இந்தத் திரைப்படம் அனைவரையும் ஒன்றிணைத்துள்ளது.
குடும்ப உறவுகளைச் சொல்லும் கதைகளுக்கு மக்கள் அளித்துள்ள ஆதரவு நெகிழ்ச்சியளிக்கிறது. இது வெறும் வணிக வெற்றி மட்டுமல்ல; மக்களிடத்தில் இப்படம் ஏற்படுத்தியுள்ள உணர்ச்சிகரமான பிணைப்பும் முக்கியமானது" என்றார்.
மேலும் , "முதல் நாள் முதல் வார இறுதி வரை இப்படத்திற்கு மக்கள் அளித்துள்ள ஆதரவு மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பாக தெலுங்கு மாநிலங்களில் படத்தின் காட்சிகள் அதிகரிக்கப்பட்டதாக தெரிந்தபோது மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்" எனத் தெரிவித்தார்.