இந்தி படத்தில் நடிக்காததற்கு காரணம் இதுதான் - கீர்த்தி ஷெட்டி

கீர்த்தி ஷெட்டி நடித்த ‘வா வாத்தியார்’, ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’, ‘ஜீனி’ படங்கள் விரைவில் வெளியாக உள்ளது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்து வரும் கீர்த்தி ஷெட்டி, கார்த்திக்கு ஜோடியாக ‘வா வாத்தியார்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கவுள்ளார். மேலும் பிரதீப் ரங்கநாதனுடன் அவர் நடித்த ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ரவிமோகனுடன் நடித்துள்ள ‘ஜீனி’ அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. இவர் ஏற்கனவே லிங்குசாமி இயக்கிய ‘த வாரியர்’, வெங்கட் பிரபுவின் ‘கஸ்டடி’ படங்களில் நடித்துள்ளார்.
இவர் ‘சூப்பர் 30’ என்ற இந்தி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். இப்போது மீண்டும் இந்திக்குச் செல்ல இருப்பதாகவும், மிலாப் மிலன் ஜாவேரி இயக்கத்தில் டைகர் ஷெராபுடன் அவர் பாலிவுட் படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதுபற்றி அவர் கூறும்போது, “நான் மும்பையில் பிறந்து வளர்ந்தவள் என்பதால், இந்தியில் நடிப்பது எனக்கு சிறப்பாக இருக்கும் என்று உணர்ந்தேன். தமிழ், தெலுங்கு, மலையாளம் போல நான் கற்றுக்கொண்டு நடிக்க வேண்டியதில்லை. இந்தி தெரியும் என்பதால் வசனங்களின் அர்த்தம் புரியும். இந்தியில் எனக்கு சில வாய்ப்புகள் வந்தன. கால்ஷீட் பிரச்சினை காரணமாக ஒப்பந்தமாகவில்லை. இந்தித் திரையுலகில் பணிபுரியும் முறை வித்தியாசமானது. அவர்கள் அனைத்து படப்பிடிப்பு ஷெட்யூலையும் ஒன்றாகவே திட்டமிடுகிறார்கள்.தென்னிந்திய சினிமாவில் பிரித்து பிரித்து நடத்துவார்கள். இதனால் இந்தி பட வாய்ப்பை ஏற்க முடியாத நிலை ஏற்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.






