"தொடரும்" சினிமா விமர்சனம்

தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா நடித்துள்ள ‘தொடரும்’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
"தொடரும்" சினிமா விமர்சனம்
Published on

வாடகை கார் டிரைவரான மோகன்லால், தனது மனைவி ஷோபனா மற்றும் பிள்ளைகளுடன் ஆனந்தமாக வாழ்ந்து வருகிறார்.மோகன்லால் வெளியூருக்கு சென்றபோது, அவரது அம்பாசிடர் காரை கஞ்சா வழக்கில் போலீசார் பறிமுதல் செய்கிறார்கள். அதேவேளை மோகன்லாலின் மகனும் மாயமாகி போகிறார். போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் போராடி காரை திரும்ப பெறும் மோகன்லால், அவர்கள் கேட்டுக்கொண்டதற்காக காரில் ஒரு காட்டுப்பாதைக்கு கூட்டிச்செல்கிறார். அப்போது காரில் இருக்கும் சடலத்தை எடுத்து, போலீசார் காட்டுக்குள் வீசியதை பார்த்து அதிர்ச்சியாகிறார். அந்த இரவில் இருந்து மோகன்லாலை பிரச்சினைகள் சூழ்ந்து கொள்கிறது. அந்த பிரச்சினைகளில் இருந்து மோகன்லால் விடுபட்டாரா, இல்லையா? என்பதே கதை.

அமைதியான குடும்ப தலைவனாக வரும் மோகன்லால், குடும்பத்தை பிரச்சினை சூழும்போது எரிமலையாக வெடிக்கிறார். சொல்ல முடியாத துயரங்களை குளியலறைக்கு சென்று அழுது தீர்க்கும்போது அனுபவ நடிப்பு பளிச்சிடுகிறது. ஜாடிக்கு ஏற்ற மூடி போல, மோகன்லாலுக்கு இணையாக எதார்த்த நடிப்பால் கவருகிறார், ஷோபனா.

போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் பிரகாஷ் வர்மா வில்லத்தனத்தில் அசத்துகிறார். ஆத்திரத்தை வரவழைக்கும் அவரது குரூரமான சிரிப்பு மிரட்டல். பினு பப்பு, பர்கான் பாசில், தாமஸ் மேத்யூ, இளவரசு உள்ளிட்ட அனைவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். ஷாஜிகுமாரின் ஒளிப்பதிவில் வியப்பு. ஜேக்ஸ் பிஜாயின் இசை படத்துக்கு உயிரோட்டம்.

சடலத்தின் பின்னணியில் இருக்கும் 'சஸ்பென்ஸ்' உடையாமல் 'கிளைமேக்ஸ்' வரை கொண்டு சென்றது பலம். முதல் பாதியில் காட்சிகள் மெதுவாக நகர்கிறது.

வழக்கமான பழிவாங்கல் கதை என்றாலும், அதில் மிகப்பெரிய சமூக கருத்தை உள்ளடக்கி சலிப்பு தட்டாமல் ரசிக்க செய்துள்ளார், இயக்குனர் தருண் மூர்த்தி.

தொடரும் - 'சஸ்பென்ஸ்'

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com