தக் லைப் பட விவகாரம்: கர்நாடக திரையரங்கு சங்கம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்டு

தக் லைப் படத்தை வெளியிட்டால் திரையரங்குகளை தீயிட்டு கொளுத்துவோம் என கன்னட அமைப்புகள் மிரட்டல் விடுத்தன.
புதுடெல்லி,
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான படம் 'தக் லைப்'. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய கமல்ஹாசன், கன்னட நடிகர் சிவராஜ்குமாரை பார்த்து, 'தமிழில் இருந்து பிறந்ததுதான் உங்கள் கன்னட மொழி' என்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கமல்ஹாசனை கண்டித்து கன்னட அமைப்பினர் தீவிர போராட்டங்களை நடத்தினர்.
அதனை தொடர்ந்து, கமல்ஹாசன் மன்னிப்பு கோரினால் மட்டுமே கர்நாடகாவில் 'தக் லைப்' படத்தை திரையிடுவோம் என்று கன்னட சினிமா வர்த்தக சபை கூறியது. கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காத நிலையில் 'தக் லைப்' படத்தை கர்நாடகத்தில் திரையிட்டால், அந்த தியேட்டர்களை அடித்து நொறுக்குவோம், தீவைத்து எரிப்போம் என கன்னட அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன.
அதனால், தக் லைப் படத்தை திரையிடும் போது தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கர்நாடக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தது. அந்த மனுவில், தக் லைப் படத்தை வெளியிட்டால் திரையரங்குகளை தீயிட்டு கொளுத்துவோம் என கன்னட அமைப்புகள் மிரட்டல் விடுப்பதாகவும், திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், மனுவை விசாரித்த சுப்ரீம் கோட்ர்டு, மனுவை தள்ளுபடி செய்துள்ளது. மேலும் இதுகுறித்து கர்நாடக ஐகோட்ர்டை அணுகுமாறு அறிவுறுத்தியுள்ளது.






