

மும்பை
2008ம் ஆண்டு ஹார்ன் ஓகே ப்ளீஸ் என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பில் பாடல் காட்சியொன்றில் நானா படேகர் அத்துமீறி நுழைந்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று கூறிய தனுஸ்ரீ தத்தா, இதுகுறித்து நான் வெளியே கூறியதால் நானா படேகர் ஆட்கள் என்னை மிரட்டினார்கள். காரில் குடும்பத்தினரோடு சென்றபோது தாக்கப்பட்டேன் என்றும் கூறினார். அந்த படத்தில் நடன இயக்குனராக பணியாற்றியவரும் தமிழில் ஜீவாவுடன் ரவுத்திரம் படத்தில் நடித்தவருமான கணேஷ் ஆச்சார்யா எனக்கு நேர்ந்த அந்த பாலியல் தொல்லை சம்பவத்துக்கு உடந்தையாக இருந்தார் என்றும் தனுஸ்ரீ தத்தா கூறினார்.
இதுபோல் டைரக்டர் விவேக் அக்னிகோத்ரி சாக்லேட் படப்பிடிப்பில் எனது உடைகளை களைந்து விட்டு நிர்வாணமாக நிற்கும்படி கூறினார் என்று அவர் மீதும் தனுஸ்ரீதத்தா பாலியல் புகார் கூறினார். 10 வருடங்களுக்கு முன்பு தனுஸ்ரீதத்தா காரை சிலர் கும்பலாக சேர்ந்து தாக்கும் வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தி நடிகைகள் சிலர் தனுஸ்ரீக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.
இந்த நிலையில் தனுஸ்ரீதத்தா மும்பை ஓஸிவாரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். நானா படேகர், கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சமீர் சித்திக், இயக்குனர் ராகேஷ் சாரங், மராட்டிய நவநிர்வான் சேவா கட்சி நிர்வாகிகள் ஆகியோர் மீது போலீசில் புகார் அளித்தார்.
தனுஸ்ரீதத்தா நானா படேக்கருக்கு எதிரான வழக்கில் போலீசார் இன்று முதல் கட்ட அறிக்கையை மும்பை கோர்ட்டில் தாக்கல் செய்து உள்ளனர். அதில் இந்த வழக்கில் நானா படேகருக்கு எதிராக தேவையான சாட்சியங்கள் இல்லை. அதனால் இந்த வழக்கு விசாரணையை தொடரமுடியவில்லை என கூறி உள்ளனர்.
இது குறித்து நடிகை தனுஸ்ரீதத்தா கூறும்போது, பல மிரட்டல்களுக்கும், நானாவை பாதுகாக்கும் அமைப்பிற்கு எதிராக தனியாக போராடியதாக கூறினார்.
இது குறித்து தனுஸ்ரீதத்தா வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;-
ஒரு ஊழல் நிறைந்த போலீஸ் மற்றும் சட்ட அமைப்பு மோசமான நபர் நானாவுக்கு எதிராக தவறான தீர்ப்பை வழங்கி உள்ளது. திரைப்பட துறையில், தொழில்துறையில் பல பெண்களை கொடுமைப்படுத்துதல், அச்சுறுத்தல் மற்றும் பாலியல் தொந்தரவு என கடந்த காலங்களில் கூட குற்றம் சாட்டப்பட்டது.
எங்கள் சாட்சிகள் மிரட்டல் மூலம் முடக்கப்பட்டனர் மற்றும் போலி சாட்சிகள் வழக்குக்கு வந்துள்ளனர். என் சாட்சிகளின் அனைத்து விவரங்களும் இன்னும் பதிவு செய்யவில்லை என்றால், சுருக்க அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டிய அவசரம் என்ன?.
இதன் பிறகு, நீங்கள் இன்னும் தாங்கள் அவர்கள் திரைப்படங்களைப் பார்க்கவும், அவற்றை ஆதரிக்கவும் முடிவு செய்தால், அது உங்கள் கெட்ட கர்மா.
நீங்கள் நீதியற்றவர்களாய் இருக்கிறீர்கள், ஆனால் கடவுளின் நீதியில் இருந்து ஒருநாளும் தப்ப முடியாது. கடந்த 10 ஆண்டுகளில் நான் சகித்து கொண்ட அவமானம், துன்புறுத்தலுக்கு பழிவாங்குவேன்.
இறுதியாக என் நம்பிக்கை இதுதான், நம்பிக்கை இல்லாத ஒரு வாழ்க்கை நெருப்பு இல்லாத ஒரு மெழுகுவர்த்தி போல் இருக்கிறது.
நான் இன்னும் நம்புகிறேன், நீதி கிடைக்கும் மற்றும் வெற்றி என்னுடன் இருக்கும் !! எப்படி... நேரம் மட்டுமே அதற்கு பதில் சொல்லும் என கூறி உள்ளார்.