தமிழக அரசு படத்துக்கு உதவவில்லை... விவசாயத்திற்கு திரும்புகிறேன் - “ஒன் மேன்” சங்ககிரி ராஜ்குமார்

தன்னுடைய படத்தை யூடியூபில் வெளியிடப் போவதாகவும், மக்கள் தனக்கு ஆதரவு அளிப்பார்கள் என நம்புவதாகவும் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு படத்துக்கு உதவவில்லை... விவசாயத்திற்கு  திரும்புகிறேன் - “ஒன் மேன்” சங்ககிரி ராஜ்குமார்
Published on

தமிழக அமைச்சர்களை நேரில் சந்தித்து, என்னுடைய திரைப்படத்தை ஊக்குவிக்கும் விதமாக ஏதாவது செய்யுங்கள் என முறையிட்டும் எதுவும் நடக்கவில்லை என்று சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

‘வெங்காயம்’, ‘பயாஸ்கோப்’ போன்ற படங்களை எடுத்த சங்ககிரி ராஜ்குமாரின் ‘ஒன் மேன்’ திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. படத்தில் புதிய முயற்சியாக அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் தானே நடித்து, படத்தின் பின்னணி வேலைகள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் தானே செய்து, தனி மனிதராக முழுப்படத்தையும் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் உருவாக்கியுள்ளார்.

உலக சினிமா வரலாற்றில் தனி ஒரு மனிதனாக ஒரு படத்தை உருவாக்க தேவைப்படும் அத்தனை துறைகளிலும் வேலை செய்து ‘ஒன் மேன்’ என்ற படத்தை உருவாக்கியிருக்கிறார் சங்ககிரி ராஜ்குமார். இப்படம் கடந்த 21ஆம் தேதி வெளியானது. ஆனால் ரசிகர்களிடம் போதிய வரவேற்பி இல்லை. இதனால் சங்ககிரி ராஜ்குமார் வேதனையுடன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

‘ஒன் மேன்’ என்ற திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க தமிழ்நாடு அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்றும், அதனால் சினிமாத் துறையில் இருந்து விலகி விவசாயம் மற்றும் தெருக்கூத்து ஆகியவற்றில் ஈடுபட உள்ளதாகவும் திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

‎படம் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெறாத நிலையில், சங்ககிரி ராஜ்குமார் வேதனையுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுயுள்ளார். அதில் “சென்னையை காலி செய்து விட்டு சொந்த ஊருக்கு வந்துவிட்டேன். ‘ஒன் மேன்’ திரைப்படம் துவங்கும் போது என்னுடைய சொந்த ஊரில் மாங்காய், தென்னை மரங்களை நட்டுவிட்டு வந்தேன். அவை இப்போது பயனுள்ள வகையில் காய்கனிகளை தருகிறது. இந்த ‘ஒன் மேன்’ திரைப்படத்திற்காக நான் மிகப்பெரிய அளவு உழைப்பினை கொடுத்திருக்கிறேன்.

இருந்த போதிலும் என்னுடைய உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கவில்லை. கடன் மட்டுமே மிச்சம் இருக்கிறது. நான் வெளிநாடுகளில் செல்லும் போது சிறிய பட்ஜெட் திரைப்படங்கள், பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் இரண்டும் ஓடுவதை பார்த்துள்ளேன். கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு நான் செல்லும் போது, ஆப்பிரிக்க திரைப்படமானது, ஒரு காருக்குள்ளேயே நடக்கக்கூடிய சம்பவமாக எடுக்கப்பட்டு இருந்தது. அதனை அந்த நாட்டினர் ஊக்கப்படுத்தும் விதத்தில் பல நாடுகளுக்கு பரிந்துரை செய்து, விளம்பரப்படுத்தினர்.

அவர்களிடம் நான் எடுக்கக்கூடிய படம் குறித்து விவரித்த போது, அனைவருமே இது ஒரு வித்தியாசமான முயற்சி என பாராட்டினார்கள். அந்தத் தருணத்தில் அவர்கள் என்னிடம், இதேபோன்ற வித்தியாசமான படங்களை எங்கள் நாட்டினர் கௌரவிப்பது போல, உங்கள் நாட்டு அரசாங்கத்திடம் கொண்டு செல்லுங்கள். அப்போது தான் அனைத்து தரப்பட்ட மக்களும், இது போன்ற சிறப்பு வாய்ந்த படங்களை பார்க்கக்கூடிய ஒரு வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்தனர்.

அவர்கள் கூறுவதும் ஒரு வகையில் உண்மைதான். இன்று இருக்கக்கூடிய வர்த்தக உலகத்தில், திரையரங்க உரிமையாளர்கள் அனைவருமே வியாபாரம் சார்ந்த படங்களை ஊக்குவிப்பார்கள். இருப்பினும் அரசாங்கம், மக்களுக்கு சிறப்பு வாய்ந்த திரைப்படங்களை பரிந்துரைக்க வேண்டும். அந்த வகையில், பல அதிகாரிகள், அமைச்சர்கள் இருக்கிறார்கள் என நம்பிக்கையோடு அவர்களை நேரில் சந்தித்து, என்னுடைய திரைப்படத்தை ஊக்குவிக்கும் விதமாக ஏதாவது செய்யுங்கள் என முறையிட்டேன். இருந்தபோதிலும் எதுவும் நடக்கவில்லை.

படத்தை ஓடிடியில் விற்று விடலாம் என முடிவு செய்து அதற்காகவும் முயற்சி செய்து பார்த்தேன். அதுவும் நான் எதிர்பார்த்தது போல அமையவில்லை. ஆகையால் யாரிடமும் உதவி கேட்காமல் வருகிற வியாழக்கிழமை என்னுடைய படத்தில் யூடியூப் பக்கத்தில் முழுவதுமாக வெளியிடப் போகிறேன். என்னுடையது நல்ல திரைப்படம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆகையால் மக்கள் எனக்கு ஆதரவளிப்பார்கள் என நம்புகிறேன். கொஞ்ச காலம் சினிமாத்துறையில் இருந்து விலகி விவசாயம் மற்றும் தெருக்கூத்து செய்யலாம் என முடிவு செய்துள்ளேன். சிறிய இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் வந்து நிச்சயமாக என்னிடம் பலர் எதிர்பார்ப்பது போல ஒரு கமர்ஷியல் படத்தை நிச்சயம் எடுப்பேன்” எனக் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com