

இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதில் இயக்குனர் ஷங்கருடன் ஏற்பட்ட மோதலால் நகைச்சுவை நடிகர் வடிவேலு புதிய படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் பல வருடங்களாக அவரால் நடிக்க முடியவில்லை. சமீபத்தில் சமரச பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டு தடை நீங்கியதால் வடிவேல் மீண்டும் உற்சாகத்தோடு நடிக்க வந்துள்ளார்.
சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். முழுக்க நகைச்சுவை படமாக தயாராகிறது. இந்த படத்தில் வரும் வடிவேலு தோற்றத்தை வெளியிட்டு உள்ளனர். இந்த நிலையில் பரியேறும் பெருமாள், தனுசின் கர்ணன் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான மாரிசெல்வராஜ் அடுத்து உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாகவும், அந்த படத்தில் நகைச்சுவை வேடத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.