

சென்னை,
யூ-டியூப் சேனல்களில் அவதூறாக பேசியதாகக்கூறி ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில். "பல்வேறு யூ-டியூப் சேனல்களுக்கு நடிகர் சிங்கமுத்து அளித்த பேட்டியில், என்னைப் பற்றி துளி கூட உண்மையில்லாத பல பொய்களைக் கூறி, தரக்குறைவாக பேசி உள்ளார். எனவே சிங்கமுத்து ரூ. 5 கோடியை எனக்கு நஷ்டஈடாக வழங்க உத்தரவிட வேண்டும். அத்துடன் என்னைப் பற்றி அவதூறு பரப்ப சிங்கமுத்துவுக்கு தடை விதிக்க வேண்டும்" என கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, ரூ.5 கோடி கேட்டு வடிவேல் தொடர்ந்த மான நஷ்ட வழக்கில் பதில் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று சிங்கமுத்து தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அவரின் கோரிக்கையை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் பதில் அளிக்க சிங்கமுத்துவுக்கு 2 வாரம் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.