வைரமுத்துக்கு ஞானபீட விருது வழங்கி கவுரவிப்பு

வைரமுத்துவுக்கு, இலக்கியத் துறையில் மிகச் சிறந்த விருதான ‘ஞானபீட விருது’ டெல்லியில் இன்று வழங்கப்பட்டது.
வைரமுத்துக்கு ஞானபீட விருது வழங்கி கவுரவிப்பு
Published on

இலக்கியத்தில் மிக சிறந்த பங்களிப்பை வழங்குபவர்களுக்கு சாகித்ய அகாடெமி விருது வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல இலக்கியத்தில் இந்தியாவின் மிக உயரிய விருதாக ஞானபீட விருது கருதப்படுகிறது. எழுத்தாளர் தன் வாழ்நாளில் இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் விருது வழங்கப்பட்டு வருகிறது

இந்த விருது 1962ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. நாட்டின் மிகவும் பழமையான இலக்கிய விருதுகளில் இதுவும் ஒன்று. டைம்ஸ் ஆப் இந்தியா குழுமத்தை சேர்ந்த, சாகு ஜெயின் குடும்பத்தினரால் நிறுவப்பட்ட பாரதிய ஞானபீடம் அறக்கட்டளைதான் இந்த விருதுகளை வழங்கி வருகிறது. அரசியலமைப்பு சட்டத்தின் 8வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுக்கும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

அகிலனின் ‘சித்திரப்பாவை’ படைப்புக்கு 1975ம் ஆண்டு ஞானபீட விருது வழங்கப்பட்டது. அதன்பிறகு 2002ம் ஆண்டு ஜெயகாந்தன் இலக்கியத்திற்கு ஆற்றிய பணிகளை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டது. எண்ணற்ற தகுதி வாய்ந்த எழுத்தாளர்கள் இருக்கும் போதிலும் 1965ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டுவரை இரண்டு தமிழ் எழுத்தாளர்கள் மட்டுமே ஞானபீட விருதைப் பெற்றுள்ளனர்.

ஞானபீட விருது பெரும் 3வது தமிழர்

டெல்லியில் நடைபெறும் விழாவில், காஷ்மீர் மன்னர் பரம்பரையின் வழி வந்தவரும், மத்திய முன்னாள் அமைச்சரும், இந்தியத் தத்துவ ஞானியுமான டாக்டர் கரண் சிங் ஞானபீட விருதினை வைரமுத்துக்கு ஞானபீட விருது வழங்கினார். விருதை பெற்றுக்கொண்டு கவிஞர் வைரமுத்து ஏற்புரை ஆற்றுகிறார்.

கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு, இலக்கியத் துறையில் மிகச் சிறந்த விருதான ‘ஞானபீட விருது’ டெல்லியில் இன்று வழங்கப்பட்டது. தனது பிறந்தநாளான இன்று, இந்தியாவில் இலக்கியத்திற்கென வழங்கப்படும் மிக உயரிய விருதான ஞானபீட விருது பெறும் சிறப்பை பெறுகிறார்.

சுமார் கால் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழுக்குக் கிடைத்த பெரும் பெருமை இது என்று இலக்கியத் துறையினர் கொண்டாடி வருகிறார்கள். பலதுறை தலைவர்கள் கவிஞர் வைரமுத்துவுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். தமிழ் இலக்கியத் துறையில் இதுவரை 1975ஆம் ஆண்டு எழுத்தாளர் அகிலன், 2002ஆம் ஆண்டு எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகிய இரண்டு பேர் மட்டுமே ஞானபீட விருது பெற்றிருக்கிறார்கள். தற்போது தமிழகத்திலிருந்து மூன்றாவது கவிஞராக ஞானபீட விருதினை வைரமுத்து பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கவிஞர் வைரமுத்து வரலாறு

1980ம் ஆண்டில் பாராதிஜாவின் ‘நிழல்கள்’ படத்தின் மூலம் பாடலாசிரியாரக அறிமுகமாகி, ‘இது ஒரு பொன் மாலைப் பொழுது’ என்ற பாடல் மூலம் புகழ் வெளிச்சத்திற்கு வந்தார். இதுவரை சுமார் 8000 பாடல்களை அவர் எழுதி இருக்கிறார். திரைப்பாடல்கள் மட்டுமின்றி, கவிதைகள், நாவல்கள், சிறுகதை, கட்டுரை, வாழ்க்கை வரலாறு, மொழிபெயர்ப்பு, சுயசரிதை என்று எல்லா இலக்கிய வடிவங்களையும் எழுதி சாதனை படைத்துள்ளார் கவிஞர் வைரமுத்து.

கவிஞர் வைரமுத்து, எண்ணற்ற கவிதைத் தொகுப்புகளையும், நாவல்கள் உள்பட 40க்கும் மேற்பட்ட நூல்களையும் வெளியிட்டுள்ளார். சிறந்த திரையிசைப் பாடலுக்கான தேசிய விருதினை வைரமுத்து ஏழு முறை பெற்றிருக்கிறார். கவிஞர் வைரமுத்து எழுதிய ‘கள்ளிக்காட்டு’ நாவல் கடந்த 2003-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றது.

கவிஞர் வைரமுத்து இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கவிஞர் வைரமுத்துவிற்கு திரைப்பட துறையினர் மற்றும் அரசியல்வாதிகள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

வைரமுத்து இதற்கு முன்னர் பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ, சாகித்ய அகாடமி, கலைமாமணி விருது, பாவேந்தர் விருது, பாரதி இலக்கிய பரிசு போன்ற விருதுகளையும், 7 தேசிய விருதுகளையும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com