

புனே
பழம்பெரும் பாலிவுட் இயக்குநர் குகு கோலி மாரடைப்பால் காலமானார்
பாலிவுட் திரையுலகில் பழம்பெரும் இயக்குநராக அறியப்படுபவர் குகு கோலி. அவர் உடல்நல குறைவால் மும்பை நகரில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில், அவர் இன்று காலமானார். அவருக்கு வயது 77.
அவருக்கு நடிகையான மனைவி அருணா இரானி மற்றும் ரீட்டா கோலியுடன் நடந்த முதல் திருமணத்தில் பிறந்த பூஜா, கரீஷ்மா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனின் அறிமுக படம் பூல் அவுர் காந்தே என்ற படத்தின் இயக்குநராக பணியாற்றியவர் கோலி. கோலிக்கும் இது அறிமுக படம்.
அது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதுடன், வர்த்தக ரீதியாக வெற்றியடைந்தது. அந்த படத்தில் மதூ, அம்ரீஷ் பூரி, அருணா இரானி மற்றும் ஜெகதீப் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அஜய் தேவ்கன், அக்சய் குமார், கரீஷ்மா கபூர் மற்றும் நக்மா நடித்த சுஹாக் என்ற படத்தின் இயக்குநரும் ஆவார்.
இதுதவிர, ஹகீகத், ஜுல்மி, அனாரி நம்பர் ஒன் மற்றும் ஏ தில் ஆஷிகானா ஆகிய படங்களையும் அவர் இயக்கியுள்ளார். கடைசியாக வோ தேரா நாம் தா என்ற பெயரில் கோலி இயக்கிய படம் 2004-ம் ஆண்டு திரையரங்கில் வெளியாகி இருந்தது.
அவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். கோலியின் இறுதி சடங்குகள் நாளை நடைபெறும்.