

நாகர்கோவிலில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் கலந்துகொண்டு தனது குடும்பத்தினர் சார்பில், கால்கள் இழந்தவர்களுக்கு செயற்கை கால்கள் மற்றும் பெண்களுக்கு ஆட்டோக்களை வழங்கினார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “எங்களது குடும்பம் எப்போதும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்துள்ளது. எனது தந்தை ரஜினிகாந்த் அவர்கள் நிறைய நலத்திட்டங்கள் செய்து வருகிறார். நான் எனது நலத்திட்ட உதவிகளை கன்னியாகுமரியில் இருந்து துவங்குவது மகிழ்ச்சியாக உள்ளது. இது முதல் முயற்சி மட்டுமே.தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்று நலத்திட்ட உதவிகள் வழங்க முயற்சி எடுப்போம். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று வந்துள்ளோம். அரசியலில் இருந்தால்தான் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என இல்லை,எப்படி வேண்டுமென்றாலும் செய்யலாம். மக்களுக்கு எது தேவையோ அதை செய்ய முயற்சி செய்வோம். தமிழக முதல்- அமைச்சர் விஜய் நல்லது செய்வார் என ஓட்டு போட்ட மக்கள் நிறைய எதிர்பார்ப்பில் உள்ளனர். எங்கள் குடும்பம் சார்பாக விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம். நிறைய சவால்களை எதிர்கொண்டு வந்துள்ளார்,மேலும் நிறைய சவால்களை வரவுள்ளது அவற்றை எதிர்கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.