

விஜய் தேவரகொண்டாவின் “ரணபாலி” படத்தின் டீசர் நாளை மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் ஏற்கனவே ‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ ஆகிய திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இந்த நிலையில், மூன்றாவது முறையாக இருவரும் புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளனர்.
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு ‘ரணபாலி’ என பெயரிடப்பட்டுள்ளது. ‘மம்மி’ உள்ளிட்ட படங்களில் நடித்த அர்னால்ட் வோஸ்லூ இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி-சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அஜய் - அதுல் இசையமைக்கின்றனர்.
1870-களில் நடைபெற்ற பிரிட்டிஷ் ஆட்சி மற்றும் பெரும் பஞ்சத்தின் பின்னணியில் இப்படத்தின் கதை உருவாகியுள்ளது. அந்த காலகட்டத்தில் தனது மக்களை காப்பாற்ற போராடும் ஒரு புரட்சிகர வீரனை மையமாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இப்படம், பிரம்மாண்டமான பான்-இந்திய திரைப்படமாக உருவாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், ‘ரணபாலி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் 16-ம் தேதி உலகம் முழுவதும் ‘ரணபாலி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், விஜய் தேவரகொண்டாவின் ‘ரணபாலி’ படத்தின் டீசர் நாளை மாலை 4.05 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதற்காக, குதிரையில் விஜய் தேவரகொண்டா செல்வது போன்ற போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். இத்திரைப்படம் அக்டோபர் 16-ம் தேதி திரைக்கு வருகிறது.