

‘தி பாரடைஸ்’ படம் குறித்து சென்னை செய்தியாளர் சந்திப்பில் விஜய்யை பாராட்டி நடிகர் நானி பேசியுள்ளார்.
நானி நடிப்பில், இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'தசரா'. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து நானிஸ்ரீகாந்த் ஒடேலா கூட்டணி மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் ‘தி பாரடைஸ்’ . எஸ்.எல்.வி. சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நானி இதுவரை ஏற்று நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
‘தி பாரடைஸ்’ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. மோகன் பாபு சோனாலி குல்கர்னி, கயாடு லோஹர், சம்பூர்ணேஷ் பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் படத்தின் புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
சென்னையில் நடந்த விழாவில் நானி பேசியதாவது:-
‘தி பாரடைஸ்’ படம் நான் மிகவும் எதிர்பார்க்கும் அளவுக்கு அதிகமாக உழைத்த படம். எனவே உங்களுக்கு தரமான சம்பவம் காத்திருக்கிறது. தமிழ் சினிமா எனக்கு ஒரு பைபிள் போன்றது. கமல், மணிரத்னம், பாரதிராஜா, பாக்யராஜ் போன்ற ஜாம்பவான்களின் படைப்புகளை பார்த்தே சினிமாவை அணுகும் விதத்தை கற்றுக் கொண்டேன்.
முதல்-அமைச்சர் விஜய் இங்கு மிகப்பெரிய நட்சத்திரம். அவர் மீது தமிழ்நாடு மக்கள் வைத்துள்ள நம்பிக்கை என்பது வெறும் பாக்ஸ் ஆபீஸ் வசூல் அல்லது அவருடைய நட்சத்திர அந்தஸ்தினால் மட்டுமே வந்தது அல்ல.
சென்னைக்கு வரும்போது சொந்த வீட்டிற்கு வருவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. சென்னையில் எனக்கும் ஏதோ ஒரு முந்தைய பிறவி தொடர்பு இருப்பது போன்ற உணர்வு எனக்கு எப்போதும் உண்டு.
விஜய் முதலமைச்சராக இருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. எங்களுக்கு மக்கள் அளிக்கும் அன்பு அப்படிப்பட்டது. தமிழ்நாட்டு மக்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கை மிகப்பெரியது. தியேட்டரில் அதிகம் வசூலிக்கும் நடிகர் என்பதற்காக மக்கள் அவருக்கு வாக்களித்திருப்பதாக நான் நினைக்கவில்லை. விஜய் நம்மில் ஒருவர் என்ற உணர்வை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளார். சட்டசபையின் சில வீடியோ காட்சிகளை நான் பார்த்துள்ளேன். முதலமைச்சர் விஜய் கலக்கி கொண்டிருக்கிறார்.
இவ்வாறு ‘தி பாரடைஸ்’ படம் குறித்து சென்னை செய்தியாளர் சந்திப்பில் நடிகர் நானி பேசியுள்ளார்.