"கருடன்" பட இயக்குனருடன் இணையும் விஜய் சேதுபதி – சசிகுமார்

விஜய் சேதுபதி – சசிகுமார் காம்போவில் புதிய படம் உருவாகப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் விடுதலை 2 படத்தை தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் 'டிரெயின்' படத்திலும், ஆறுமுக குமார் இயக்கத்தில் 'ஏஸ்' படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.மேலும் பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். அதற்குப்பின் 'ஈசன்' படத்தை இயக்கிய சசிகுமார் அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார். இவரது நடிப்பில் வெளியான 'அயோத்தி' 'கருடன், நந்தன்' ஆகிய திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. அதனை தொடர்ந்து தற்போது 'டூரிஸ்ட் பேமிலி, மை லார்ட்' ஆகிய படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். குற்றப்பரம்பரை நாவலைத் திரைப்படமாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் விஜய் சேதுபதியும், சசிகுமாரும் இணைந்து புதிய படத்தில் நடிக்கப் போவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே விஜய் சேதுபதி, சசிகுமார் ஆகிய இருவரும் இணைந்து சுந்தரபாண்டியன் படத்தில் நடித்திருந்தனர். அடுத்தது ரஜினியின் பேட்ட படத்திலும் நடித்திருந்தனர். இவர்கள் இருவரும் இணைந்து மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய இருக்கும் தகவல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்களது கூட்டணியிலான புதிய படத்தினை எதிர்நீச்சல், கொடி, கருடன் ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்க உள்ளதாக அப்டேட் வெளிவந்துள்ளது.
துரை செந்தில்குமார் தற்போது லெஜெண்ட் சரவணன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தை முடித்த பின்னர் விஜய் சேதுபதி- சசிகுமார் காம்போவில் புதிய படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






