

விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 9ஆம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால் தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காததால் வெளியாவதில் தாமதம் ஆகியுள்ளது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர். தேர்தலுக்கு முன்பாக ‘ஜன நாயகன்’ ரிலீஸ் ஆகுமா? என்ற கவலையும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கிடையே, விஜய்யின் மெகா ஹிட் படங்களான ‘கில்லி’, ‘தெறி’ படங்களை மீண்டும் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டனர்.
இதன்படி, கடந்த வாரம் ‘கில்லி’ வெளியான நிலையில், 27ஆம் தேதி (இன்று) ‘தெறி’ படம் வெளியாக உள்ளது. ‘கில்லி’ ரீ-ரிலீஸை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்த நிலையில், ‘தெறி’ ரிலீஸையும் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து உள்ளனர். இதனிடையே, ‘தெறி’ படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
சண்டைக் காட்சி ஒன்றில் பாலத்தில் இருந்து விஜய் குதிப்பது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இந்தக் காட்சிக்காக டூப் போடாமல் விஜய்யே ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார். டூப் இன்றி துணிச்சலுடன் ஸ்டண்ட் காட்சியில் நடித்தார்… மெய்சிலிர்க்கும் தருணம் என்று பதிவிட்டு இந்த வீடியோவை தாணு பகிர்ந்துள்ளார். இந்த பதிவு விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.