விஜய் குறித்த எக்ஸ் பதிவு போலியானது - நடிகை கயாடு லோஹர்

நடிகை கயாடு லோஹர் விஜய் குறித்து எக்ஸ் பதிவு குறித்து விளக்கம் அளித்துள்ளார்
‘டிராகன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கயாடு லோஹர் சமூக வலைதளங்களில் அதிகம் தேடும் நடிகையாக மாறிவிட்டார். தற்போது ஆகாஷ் பாஸ்கரின் இயக்கத்தில் ‘இதயம் முரளி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவர் பெயரில் டுவிட்டர் பதிவு ஒன்று வைரல் ஆனது.
“கரூர் பேரணியில் எனது நெருங்கிய நண்பர் ஒருவரை இழந்தேன். இவை எல்லாம் தவெகவின் சுயநல அரசியலுக்காக. விஜய், உங்கள் பசிக்கு இன்னும் எத்தனை உயிர்கள்?” என்று நடிகை கயாது லோஹர் பதிவிட்டதாக சமூக ஊடகங்களில் தவறாகப் பகிரப்பட்டது.
இந்நிலையில் நடிகை கயாடு லோஹர் இது குறித்து எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் “எனது பெயரில் பதிவுகளைப் பரப்பும் டுவிட்டர் கணக்கு போலியானது. எனக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை. அதில் வரும் பதிவுகள் என்னுடையது அல்ல. எனக்கு கரூரில் நண்பர்கள் யாரும் இல்லை. என் நண்பர் இறந்துவிட்டதாக பரவும் செய்தி பொய்யானது. யாரும் நம்ப வேண்டாம். கரூரில் நடந்த சம்பவத்தால் நான் அதிகம் சோகமடைந்தேன். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கல்” என கயாடு லோஹர் பதிவிட்டுள்ளார்.






