

நாளை சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், படம் வெற்றி பெற இயக்குநர் வெங்கி அட்லுரி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மொட்டை அடித்து சாமி தரிசனம் செய்துள்ளார்.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தில் சூர்யா நடித்துள்ளார்.
சூர்யாவின் 46-வது திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தை நாக வம்சி தயாரித்துள்ளார். இதில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பைக் கொடுத்தது. முக்கியமாக, சஞ்சய் விஸ்வநாத் என்கிற சூர்யா தன்னைவிட 20 வயது குறைந்த பெண்ணைக் காதலிக்கும் கதை என்பதால் சுவாரஸ்யமாக இருக்கும் என்றே தெரிகிறது.
ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். நவின் நூலி படத்தொகுப்பு செய்துள்ளார். ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் 2-வது பாடலான ‘வெட்டிங் சாங்’ வெளியாகியுள்ளது. நடிகர் கென் எழுதிய இப்பாடலை சூர்யா பாட, ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படம் வெற்றி பெற வேண்டும் என்று இயக்குநர் வெங்கி அட்லுரி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோயிலில் மொட்டை அடித்து சாமி தரிசனம் செய்துள்ளார். இப்படம் நாளை வெளியாகவுள்ளது.
இப்படத்தின் விநியோகிஸ்தர்களுக்கான சிறப்புக் காட்சியைக் கண்டவர்கள், கண்டிப்பாக ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஆகும் எனப் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.