‘விரும்பும் நபர்களுக்கு ஓட்டு போடுங்கள்... ஆனால்’ - நடிகர் பார்த்திபன்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை,
கரூரில் நேற்று நடைபெற்ற விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் பெரும் துயரத்தை ஏற்படுத்திய சம்பவம் குறித்து காவல்துறை சார்பில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசியல் கட்சி தலைவர்களும் திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் பார்த்திபன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
‘கூட்டம்’ என்ற ஒற்றை வார்த்தைக்கு பின்…. 10,100,1000,1000000000000000000000 போன்ற பூஜ்ய உயிர்களின் அன்பும், பாசமும், தன்னலமற்ற ஊக்கப்படுத்துதலும், வலியும், வேதனையும் முடிவில் கேள்விக் கேட்பாறற்ற பிணங்களாய் வெள்ளை போர்த்தி, வண்ண மாலை சாத்தி,(இருந்தால்) உறவினர்களின் கண்ணீர் ஆற்றில் கரைக்கச் சொல்லி ‘கொடுத்து வைத்தவர்கள்’
ஓட்டு போடுங்கள் - விரும்பும் நபர்களுக்கு, ஆனால் கூட்டம் போடாதீர்கள் - வாழ்வை தொலைக்க!அதிலும் இறுதி ஊர்வலத்தில் பிய்த்து எறியப்படும் பிஞ்சு பூக்களாய் குழந்தைகளை பலியாக்காதீர்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






