

சென்னை,
'சர்தார் 2' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சுந்தர்.சி, " பல வருடங்களுக்கு முன்பு நான் மெர்சல் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டேன். அப்போது அங்கே அமர்ந்திருந்த CM விஜயின் ரசிகர்களை நோக்கி இங்கே பல வருங்கால எம்.எல்.ஏ-க்களும் அமைச்சர்களும் அமர்ந்துள்ளனர் என்று பேசினேன் " என்றார்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஐ.வி.ஒய். என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் தயாரிப்பில் இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் தயாராகி உள்ள படம். 'சர்தார் 2'. இதில் கார்த்தி, எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு, ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் செப்டம்பர் 10, 2026 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர் சூர்யா, ரவி மோகன், இயக்குநர் மோகன் ராஜா, சுந்தர் சி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய இயக்குநர் சுந்தர்.சி, "பல வருடங்களுக்கு முன்பு நான் மெர்சல் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டேன். அப்போது அங்கே அமர்ந்திருந்த CM விஜயின் ரசிகர்களை நோக்கி இங்கே பல வருங்கால எம்.எல்.ஏ-க்களும் அமைச்சர்களும் அமர்ந்துள்ளனர் என்று பேசினேன். ஆனால் அது இவ்வளவு விரைவாக நடைபெறும் என நான் நினைக்கவில்லை" என்றார்.
மேலும், "நான் கார்த்தி சாரை அரசியலுக்குள் இழுக்கவில்லை. விஜய் சார் மற்றும் ரஜினி சாருக்குப் பிறகு, கார்த்தி சார் தான் அனைத்துத் தரப்பு ரசிகர்களாலும் விரும்பப்படும் ஒரு மாஸ் என்டர்டெய்னர்." என்று பேசினார்.
மேலும், "கார்த்தியுடன் நடிக்க உள்ள புதிய படத்தின் அப்டேட்டை கொடுத்துள்ளார். அதாவது, கார்த்தி சாருடன் நான் நடிக்கும் படம், 80-களைப் போல பல நட்சத்திர நடிகர்களைக் கொண்ட ஒரு முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னர். அத்திரைப்படம் அடுத்த ஆண்டு தொடங்கும் என நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.