

மும்பை,
பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா, நடிகை கத்ரீனா கைப்பை பார்த்தாலே பயமாக இருக்கும் என்று பழைய பேட்டி ஒன்றில் பேசியது தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.
'காபி வித் கரண்' என்ற நிகழ்ச்சியின் பழைய வீடியோவில், தொகுப்பாளர் கரண் ஜோஹர், "கத்ரீனா கைப்பை பார்த்து ஏன் இவ்வளவு பயப்படுகிறீர்கள்?" என்று பரினீதியிடம் கேள்வி எழுப்புகிறார்.
அதற்கு பதிலளித்த பரினீதி, "இப்போதும் அவரை பார்த்தால் எனக்கு பயமாகத்தான் இருக்கும். ஒருநாள் அவர் ஜிம்மிற்குள் வந்ததும், நான் உடனே உடற்பயிற்சி சைக்கிளின் வேகத்தை அதிகரித்து, மிகவும் கடினமாக உடற்பயிற்சி செய்வது போல நடித்தேன். பிறகு அவர் என்னிடம் வந்து, 'என்ன செய்கிறாய்? எத்தனை நிமிடங்கள் செய்தாய்?' என்று கேட்டார். நான் '20 நிமிடங்கள்' என்றேன். அதற்கு அவர், 'இன்னும் 5 நிமிடங்கள் செய்' என்றார். நானும் உடனே, 'சரி' என்று கூறிவிட்டேன்" என்று சிரித்தபடி பகிர்ந்தார்.
மேலும், "கத்ரீனா கைப் எனக்கு ரோல் மாடல். அவர் மிகவும் ஒழுக்கமானவர். முகத்தில் எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் நேரடியாக பேசுவார். அதனால்தான் அவரை பார்த்தால் ஒரு மரியாதையுடனான பயம் வருகிறது" என்றும் பரினீதி சோப்ரா தெரிவித்துள்ளார்.
இந்த பழைய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.