"கூகுளில் உன் பெயரை தேடினால் வருமா?"... கேலி செய்தவர்களுக்கு வெற்றியால் பதிலடி கொடுத்த வைஷ்ணவி

ஆனந்த் தேவரகொண்டா மற்றும் வைஷ்ணவி சைதன்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘எபிக் பர்ஸ்ட் செமஸ்டர்’ .
வைஷ்ணவி சைதன்யா
Published on

சென்னை,

"கூகுளில் உன் பெயரை தேடினால் வருமா?" என்று கேலி செய்தவர்களுக்கு வைஷ்ணவி சைதன்யா இன்று தனது வெற்றியால் பதிலடி கொடுத்துள்ளார்.

‘எபிக் பர்ஸ்ட் செமஸ்டர்’

அறிமுக இயக்குநர் ஆதித்யா ஹாசன் இயக்கத்தில், ஆனந்த் தேவரகொண்டா மற்றும் வைஷ்ணவி சைதன்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘எபிக் பர்ஸ்ட் செமஸ்டர்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் போர் சினிமாஸ் சார்பில் நாகவம்சி, சாய் சௌஜன்யா ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

டிரெய்லர்

இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகை வைஷ்ணவி சைதன்யா கலந்து கொண்டு, படத்தில் நடித்த அனுபவம் மற்றும் தனது திரைப்பயணம் குறித்து உருக்கமாகப் பேசினார்.

அவர் பேசுகையில், “சித்தாரா பேனரில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறேன். தற்போது ‘எபிக்’ படத்திலும் நடித்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எதிர்காலத்தில் இன்னும் பல நல்ல படங்களில் நடிக்க விரும்புகிறேன். ‘கடலி’ கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பளித்ததற்கு இயக்குநர் ஆதித்யாவுக்கு நன்றி” என்றார்.

கூகுளில் பெயர் காட்டுமா?

தான் திரையுலகில் நுழைய முயன்ற ஆரம்ப காலகட்டத்தில் எதிர்கொண்ட அவமதிப்பையும் வைஷ்ணவி சைதன்யா பகிர்ந்துகொண்டார்.

“நான் திரையுலகிற்கு வந்த ஆரம்பத்தில் , ஒருவர் என்னை மிகவும் அலட்சியமாகப் பார்த்து, ‘உனக்கு என்ன அடையாளம் இருக்கிறது? உன்னை யார் நினைவில் வைத்திருப்பார்கள்? கூகுளில் உன் பெயரை தேடினால் வருமா?’ என்று என் முகத்திற்கு நேராக கேலி செய்தார்.

அந்த நேரத்தில் எனக்கு எந்த வெற்றியும் இல்லாததால், அந்த வார்த்தைகள் என்னை மிகவும் காயப்படுத்தின. அந்த வலியை அமைதியாக சகித்துக்கொள்வதை தவிர என்னால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை. இப்போது கூகுளில் என் பெயரை தேடினால் என்னைப் பற்றிய முழு விவரங்களும் வரும். இதுவே எனது வாழ்க்கையின் மிகச் சிறந்த தருணம்” என்று தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com