

இப்போது நான் இருக்கும் நிலையில் ‘கார்கி’ படம் வந்திருந்தால் நான் நடித்திருப்பேன் என்று நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கூறியுள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி மலையாள சினிமாவின் மூலம் அறிமுகமானவர். தமிழில் ‘ஆக்சன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஐஸ்வர்யா லட்சுமி ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தார்.
கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘மாமன்’ திரைப்படம் வெற்றியைப் பெற்றது. தற்போது ‘கட்டா குஸ்தி’ இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஜூலை 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் ஐஸ்வர்யா லட்சுமி அளித்த பேட்டியில், சாய்பல்லவி நடித்த ‘கார்கி’ படத்தை நிராகரித்தது ஏன்? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், “முதலில் ‘கார்கி’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு என்னை தேடி வந்தது. ஆனால், அந்த கதையை கேட்ட பிறகு அந்த சமயத்தில் என்னை விட பெரிய நடிகை நடித்தால் தான் நல்லா இருக்கும். அது அந்த இயக்குனருக்கும் நல்லது என நினைத்து, வேண்டாம் என்றேன். ஒருவேளை இப்போது நான் இருக்கும் நிலையில் ‘கார்கி’ படம் வந்திருந்தால் நான் நடித்திருப்பேன்” என்றார்.
மேலும், ‘கார்கி’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் பல விருதுகளை வென்றதுடன் நல்ல விமர்சனங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.