

சென்னை,
இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலில் இந்த படத்தில் நடிகை நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தேதிகள் பிரச்சினை காரணமாக அவர் விலகியதாகவும், அவருக்கு பதிலாக திரிஷா இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கார்த்தி - திரிஷா கூட்டணி ஏற்கனவே 'பொன்னியின் செல்வன்' படங்களில் வந்தியத்தேவன் - குந்தவை கதாபாத்திரங்களில் ரசிகர்களை கவர்ந்தது. இதனால், இருவரும் மீண்டும் இணைவது குறித்த தகவல் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி, தற்போது 'சர்தார் 2', 'மார்ஷல்' உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே, இயக்குநர் மோகன் ராஜா இயக்கும் புதிய திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
'தனி ஒருவன்', 'வேலைக்காரன்' உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய மோகன் ராஜா, கடைசியாக மலையாளத்தில் வெற்றி பெற்ற 'லூசிபர்' படத்தை தெலுங்கில் 'காட் பாதர்' என்ற பெயரில் இயக்கியிருந்தார்.
கார்த்தி - மோகன் ராஜா கூட்டணியில் உருவாகும் இந்த புதிய படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.