பெண் உயிரிழந்த விவகாரம் : 3 மணிநேர விசாரணையில் 20 கேள்விகளுக்கு பதிலளித்த அல்லு அர்ஜுன்

சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நேரில் ஆஜராகி 20 கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
பெண் உயிரிழந்த விவகாரம் : 3 மணிநேர விசாரணையில் 20 கேள்விகளுக்கு பதிலளித்த அல்லு அர்ஜுன்
Published on

ஐதராபாத்,

நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2' திரைப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக கடந்த 5-ம் தேதி வெளியானது. முன்னதாக இந்தப் படத்துக்கு தெலுங்கானா அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்திருந்தது.

அதன்படி கடந்த 4-ம் தேதி இரவு ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் நடந்த சிறப்புக் காட்சியைப் பார்க்கச் சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவருடைய மகன் தேஜ் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். ரேவதி உயிரிழந்தது தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த 13-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து ஜாமீன் பெற்று சிறையில் இருந்து அவர் வெளியே வந்தார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நடிகர் அல்லு அர்ஜுனுக்கு நேற்று ஐதராபாத் போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பினர்.

அதில் நாளை அதாவது இன்று காலை 11 மணிக்கு நடிகர் அல்லு அர்ஜுன் சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், நடிகர் அல்லு அர்ஜுன் சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் இன்று காலை 11 மணியளவில் விசாரணைக்கு ஆஜரானார். இந்த விசாரணை 1 மணி நேரம் நடைபெறும் என கூறப்பட்டது.

ஆனால் 3 மணி நேரத்திற்கு கூடுதலாகம் போலீசார் அல்லு அர்ஜுனிடம் விசாரணை நடத்தினர். தற்போது இந்த விசாரணை நிறைவடைந்துள்ளது. அந்த விசாரணையின் போது போலீசாரால் கேட்கப்பட்ட 20 கேள்விகளுக்கும் நடிகர் அல்லு அர்ஜுன் பதிலளித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com