நடிகர் மீது மகளிர் ஆணையம் வழக்கு

நடிகர் மீது மகளிர் ஆணையம் வழக்கு
Published on

பிரபல மலையாள நடிகர் அலென்சியர் லே லோபஸ். இவர் 80-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.

சமீபத்தில் கேரள மாநில திரைப்பட விருதுகள் முதல்-மந்திரி பினராயி விஜயன் முன்னிலையில் வழங்கப்பட்டன. இதில் அலென்சியர் லே லோபஸ் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார்.அப்போது அவர் பேசும்போது, ''பெண் சிலை விருதை கொடுத்து எங்கள் உணர்ச்சிகளை தூண்ட வேண்டாம். நான் பெண் சிலையை பார்த்து மயங்கமாட்டேன். வலிமையான ஆணின் சிற்பத்துடன் கூடிய விருதை வழங்குங்கள்'' என்றார்.

இந்த பேச்சு சர்ச்சையானது. அவருக்கு கேரள திரைப்பட பெண்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்தது.

இந்த பிரச்சினை குறித்து பெண் பத்திரிகையாளர் ஒருவர் அலென்சியர் லே லோபசிடம் கருத்து கேட்டபோது, அவரிடம் அவதூறாக பேசி தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அலென்சியர் லே லோபஸ் மீது கேரள மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்ததுடன் இந்த சம்பவம் குறித்து அறிக்கை அளிக்கும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு அறிவுறுத்தி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com