

நடிகை பிரியா பவானி சங்கர் ‘இருமுடி கட்டு’ திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி தேஜா, ரசிகர்களால் ‘மாஸ் மகாராஜா’ என அன்புடன் அழைக்கப்படுகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மாஸ் ஜாதரா’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது தனது 77-வது திரைப்படமான ‘இருமுடி கட்டு’ படத்தின் மூலம் ரசிகர்களை சந்திக்க தயாராகி வருகிறார்.
இந்தப் படத்தை ‘மஜிலி’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சிவ நிர்வாணா இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். சாய் குமார், பேபி நக்ஷத்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் வெளியான ‘இருமுடி கட்டு’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அந்த போஸ்டரில், ஐயப்ப பக்தராக தலையில் இருமுடி சுமந்தபடி வித்தியாசமான தோற்றத்தில் ரவி தேஜா காட்சியளித்திருந்தார். இந்த புதிய தோற்றம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது. இந்தப் படம் வருகிற ஆகஸ்ட் 21-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆன்மிகம், உணர்வுகள் மற்றும் விறுவிறுப்பான கதைக்களம் கலந்த இந்தப் படம் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரவி தேஜாவின் வித்தியாசமான கதாபாத்திரத்தை பெரிய திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘இருமுடி கட்டு’ பாடல் வெளியானது. இந்த பாடலை அனந்த் பாடியுள்ளார். பாடல் வரிகளை சிவ நிர்வாணா மற்றும் கல்யாண் சக்ரவர்த்தி இணைந்து எழுதியுள்ளனர்.
‘இருமுடி கட்டு’ படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இது ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் தெலுங்கில் ‘இருமுடி’ என வெளியாகிறது.
‘இருமுடி கட்டு’ படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
‘இருமுடி கட்டு’ திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து பிரியா பவானி சங்கர் பகிர்ந்துள்ளார். அதில் “இந்தப் படத்தின் கதையைக் கேட்டபோது, சிவா நிர்வாணா உருவாக்கியிருந்த உணர்வுப்பூர்வமான உலகத்தைப் புரிந்துகொண்டேன். இப்படிப்பட்ட கதையில் நான் நடித்திருப்பது மகிழ்ச்சி. இத்திரைப்படத்தின் உறவுகளில் நிறைய அன்பும் உணர்வுப்பூர்வமான தருணங்களும் இருக்கின்றன. அதனால், காவேரி கதாபாத்திரம் எனக்கும் ஸ்பெஷல்.
நடிகர் ரவி தேஜாவுடன் பணியாற்றியது மிகவும் சிறப்பான அனுபவம். எல்லோருடனும் அன்பாகவும் இயல்பாகவும் பழகினார். அதனால் எங்களுக்கும் நடிப்பது எளிதாகவும் மகிழ்ச்சியான அனுபவமாகவும் இருந்தது. ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் வெளிப்படுத்த வேண்டிய உணர்வுகள் குறித்து சிவா மிகவும் தெளிவாக இருந்தார். அவரது வழிகாட்டுதலுடன் பணியாற்றியது அழகான அனுபவம்.
படப்பிடிப்பு முடிந்தபோது, இந்த திரைப்படத்தைத் தாண்டியும் நாங்கள் எவ்வளவு விஷயங்களை எடுத்துச் சென்றிருக்கிறோம் என்பதை உணர்ந்தேன். ஏராளமான காட்சிகளில் நடித்தோம், ஆயிரக்கணக்கான நினைவுகளை உருவாக்கினோம், எங்களுக்குள் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய பல நகைச்சுவையான தருணங்களைப் பகிர்ந்துகொண்டோம், நிறைய சிரித்தோம். நாம் பணியாற்றும் மனிதர்கள், நம்முடன் எடுத்துச் செல்லும் நினைவுகளின் முக்கியமான பகுதியாக மாறிவிடும் பயணங்களில் இதுவும் ஒன்று” என தெரிவித்துள்ளார்.