

நடிகர் யாஷ், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் 1, கே.ஜி.எப் 2 உள்ளிட்ட படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். இந்த படம் வெளியாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வசூலையும் வாரி குவித்தது. . இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வசூலை வாரி குவித்தது. இதையடுத்து நடிகர் யாஷ்-க்கு கர்நாடகா மட்டுமின்றி இந்தியா முழுவதும் ரசிகர் பட்டாளம் உருவானது.
இதையடுத்து, யாஷ் தற்போது இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். கேவிஎன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் கேங்ஸ்டர் டிராமா கதைக்களத்தில் உருவாகி வருகிறது. இதில் நயன்தாரா, ருக்மணி வசந்த், கியாரா அத்வானி, ஹுமா குரேஷி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் மார்ச் 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யாஷின் 40வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட இப்படத்தின் முதல் டீசர் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் இடம்பெற்ற அதிரடி மற்றும் வன்முறை காட்சிகள் குறித்து ரசிகர்கள் மத்தியில் விவாதங்கள் எழுந்தன.
இந்நிலையில், ‘டாக்ஸிக்’ படத்தின் இரண்டாவது டீசர் வெளியீடு குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, புதிய டீசர் வருகிற 20ஆம் தேதி காலை 9.35 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.