

‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ படம் செப்டம்பர் 4-ந்தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அறிமுக இயக்குநர் டி. அந்தோணி இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’. மனதை வருடும் காதல் மற்றும் உணர்வுபூர்வமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படத்தில் டி. அந்தோணியுடன், மதுமிதா தாஸ், ஜீவா ரவி, ரெஜின் ரோஸ், ஆலம் ஷா, நவ்யா சுஜி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாடல்களுக்கு ஜெய்கார் ஹரிநாத் மற்றும் அசோக் ஸ்ரீதரன் இசையமைத்துள்ளார்கள். பின்னணி இசையை ஜோயி ரிடா அமைத்துள்ளார். பாடல்களை கார்த்திக் நேத்தா மற்றும் தமிழ்மணி எழுதியுள்ளனர்.
சமீபத்தில் வெளியான ‘தேடல் தொடருதே..’ லிரிக்கல் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியான டீசரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. டீசரில், தனிமை, வலி, மதுப்பழக்கம் ஆகியவற்றால் சிக்கித் தவிக்கும் இளைஞனின் வாழ்க்கையில் காதல் ஏற்படுத்தும் மாற்றம் அழகான காட்சிகளின் மூலம் உணர்வுபூர்வமாக சித்தரிக்கப்பட்டு இருந்தது.
ஒளியும் ஒலியும் இணைந்து சொல்லப்படும் எபிக் காதல் கதையாக உருவாகியுள்ள இந்தப் படம், பழைய காதல் கதைகளின் அழகை தக்கவைத்துக் கொண்டே, இன்றைய ஜென்-ஜி மற்றும் மில்லேனியல் ரசிகர்களை கவரும் வகையில் நவீன திரைக்கதையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தாயை இழந்து சிறுவயதிலிருந்தே தனிமையில் வளர்ந்த ஒரு இளைஞன், மதுவுக்கு அடிமையாக இருளில் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில், ஒரு காதல் அவனது வாழ்க்கையில் நுழைகிறது. அந்த காதல் அவனை எப்படி முழுமையாக மாற்றி, தனிமை மற்றும் இருளிலிருந்து வெளிச்சம் நோக்கி அழைத்துச் செல்கிறது என்பதே படத்தின் மையக்கரு.
இந்நிலையில், ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ படம் செப்டம்பர் 4-ந்தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.