

சென்னை,
தேனி மாவட்டத்திலுள்ள பண்ணைப்புரம் என்னும் கிராமத்தில் பிறந்தவர் இளையராஜா. 1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில், வெளியான 'அன்னக்கிளி' படத்தின் மூலம்தான் தனது இசைப்பயணத்தை தொடங்கினார் இசைஞானி இளையராஜா. இவர் தனது வரலாற்றில் இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் 7,000 பாடல்களை எழுதி உள்ளார்.
இவர் 2010-ம் ஆண்டு பத்ம பூஷன் விருதையும் 2018-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருதையும் பெற்றார். இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட உள்ளது. ஆசியாவிலேயே முதல் முறையாக "சிம்பொனி" இசை அமைத்தவர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். இந்த நிலையில், இசைஞானி இளையராஜா இன்று தனது 83-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
அதிகாலை முதலே சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இசை ஸ்டுடியோவில் ஏராளமான ரசிகர்கள் திரண்டு, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.ரசிகர்களின் வருகையால் இளையராஜாவின் ஸ்டுடியோ பகுதி விழாக்கோலம் பூண்டது. தமிழ் திரையிசையில் அழியாத முத்திரை பதித்துள்ள இளையராஜாவுக்கு சமூக வலைதளங்களிலும் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் இசைஞானி இளையராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது, "உங்க இசை உங்க வயசைப் போல பல நூறு மடங்கு வாழும். நீங்களும் எங்கள் பேராசைகளையெல்லாம் கடந்த ஆயுளைப் பெற்று வாழவேண்டும், இசையோடு. உங்கள் கமல்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.