மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’... பிரியங்கா மோகன் சொன்ன வார்த்தைகள்

நடிகை பிரியங்கா மோகன் மாரி செல்வராஜ் இயக்கி வரும் 'மஞ்சணத்தி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’... பிரியங்கா மோகன் சொன்ன வார்த்தைகள்
Published on

சென்னை,

மாரி செல்வராஜ் அவர்களுடன் இணைந்து இந்த அழகான பயணத்தில் பங்கேற்பதில் நான் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறேன் என்று பிரியங்கா மோகன் பதிவிட்டுள்ளார்.

மாரி செல்வராஜின் புதிய படைப்பு

'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்', 'மாமன்னன்', 'வாழை', 'பைசன் காளமாடன்' உள்ளிட்ட படங்கள் மூலம் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள மாரி செல்வராஜ், தற்போது தனது ஆறாவது படைப்பாக 'மஞ்சணத்தி'யை இயக்க உள்ளார். இந்த படத்தின் முக்கிய சிறப்பம்சமாக, இளையராஜா இசையமைப்பாளராக இணைந்துள்ளார். மாரி செல்வராஜ் - இளையராஜா கூட்டணி முதல் முறையாக இணைவதால், ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

படத்தின் கதை என்ன?

'மஞ்சணத்தி' திரைப்படம், 4 பெண்களின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இதில் கதிர், பிரியங்கா மோகன், கயாடு லோகர், பூர்ணிமா ரவி, விது மற்றும் காக்கா முட்டை புகழ் ஜே. விக்னேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தேனியில் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. மொத்தம் 90 நாள்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பிரியங்கா மோகனின் பதிவு

இந்த நிலையில், 'மஞ்சணத்தி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை பிரியங்கா மோகன் இந்த படம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சில படங்கள் தொடங்குவதற்கு முன்பே நம் மனதோடு ஒட்டிக்கொள்ளும் ஒரு உணர்வைத் தருகின்றன. 'மஞ்சணத்தி'யின் ஒவ்வொரு பக்கத்தையும் வாசிக்கும்போதும், ஆழமான உணர்வுகளும் உயிரோட்டமும் நிறைந்த ஒரு உலகத்திற்குள் நெருங்கிச் செல்வது போன்ற உணர்வு ஏற்பட்டது. மாரி செல்வராஜ் அவர்களுடன் இணைந்து இந்த அழகான பயணத்தில் பங்கேற்பதில் நான் மிகுந்த நன்றியுணர்வுடனும் உற்சாகத்துடனும் இருக்கிறேன். உங்கள் உலகத்திற்குள் அடியெடுத்து வைப்பதையும், இந்தப் பயணத்தில் உங்களுடன் இணைவதையும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.

மேலும், இசைஞானி இளையராஜா அவர்களின் இசை எங்கள் கதைக்கு உயிர் கொடுப்பது இந்தப் பயணத்தை இன்னும் சிறப்பானதாக்குகிறது. இந்த மாயாஜாலப் பயணத்தைத் தொடங்கவும், 'மஞ்சணத்தி'யை உங்கள் அனைவரிடமும் கொண்டு சேர்க்கவும் ஆவலாகக் காத்திருக்கிறேன்." என்று நடிகை பிரியங்கா மோகன் பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com