

சென்னை,
இறந்து போன காதலியின் நினைவாக காரணமாக திருமணமே செய்துகொள்ளாமல் இருக்கிறார், நிவின் பாலி. அவரது பக்கத்துக்கு வீட்டுக்கு வரும் கல்லூரி மாணவி மமிதா பைஜூ, நிவின் பாலியை காதலிக்க தொடங்குகிறார். ஆரம்பத்தில் வயது வித்தியாசம் என்று விலகி போகும் நிவின் பாலி, ஒருகட்டத்தில் மமிதா பைஜூவின் அன்பில் மையம் கொள்கிறார். காதலுக்கு பச்சைக்கொடி காட்டுகிறார்.
தனது மகளை கல்லூரி படிப்பு முடிந்ததும் வெளிநாடு அனுப்பலாம் என்று திட்டமிட்டிருந்த மமிதா பைஜூவின் குடும்பத்தாருக்கு, இந்த காதல் விவகாரம் தெரியவர பிரச்சினை வெடிக்கிறது. மமிதா பைஜூவை வலுக்கட்டாயமாக வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள். வெளிநாடு சென்ற மமிதா பைஜூ என்ன ஆனார்? அவரை நினைத்து வாழும் நிவின் பாலியின் கதி என்ன? இவர்களின் காதல் கைகூடியதா, இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.
காதல் தோல்வியில் மனம் வெதும்புவது, குறும்புக்கார இளம்பெண்ணின் செயல்களினால் வெட்கப்படுவது, மீண்டும் ஒரு காதல் தோல்வியினால் கலங்குவது, என்று பல்வேறு உணர்வுகளை மிக சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார், நிவின் பாலி. அவரது நடிப்பு படத்துக்கு பலம்.
வழக்கம்போல துருதுரு நடிப்பால் கவர்கிறார், மமிதா பைஜூ. அவரது சுட்டித்தனம் படம் முழுக்க ரசிக்கவைக்கிறது. நிவின் பாலியின் தம்பியாக நடித்திருக்கும் சங்கீத் பிரதாப், பிந்து பணிக்கர், சுரேஷ் கிருஷ்ணா, வினய் போர்ட், ஸ்ரிந்தா, ஷமீர் கான், மீனாட்சி ரவீந்திரன், அயசங்கர் கரிமுட்டம், தங்கம் மோகன், வெட்டுக்கிளி பிரகாஷ் என அனைத்து நடிகர்களும் பொருத்தமான தேர்வு.
அஜ்மல் சாபுவின் ஒளிப்பதிவு படத்துடம் ஒன்ற வைக்கிறது. விஷ்ணு விஜய் இசையமைப்பில் பாடல்களும், பின்னணி இசையும் ரசிப்பு. எதார்த்தமான காதல் காட்சிகலும், உணர்ச்சிப்பூர்வமான எமோஷனல் காட்சிகளும் பலம். சில இடங்களில் லாஜிக் மீறல்கள் யோசிக்க வைக்கிறது.
சாதாரண காதல் கதை என்றாலும், மனதை தொடும்படியான காட்சிகள் மூலம் ரசித்து மகிழ செய்துள்ளார், இயக்குனர் கிரிஷ் ஏ.டி. கிளைமேக்ஸ் காட்சி உணர்வுப்பூர்வமாக இருக்கிறது.