வெவ்வேறு திசையில் பயணிக்கும் நான்கு நாயகர்கள் : ‘சில நேரங்களில் சில மனிதர்கள்' சினிமா விமர்சனம்

படத்தின் டைட்டிலே ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. டைட்டிலைப் போலவே கதையும்... 4 கதைகள் ஒரு புள்ளியில் இணைகின்றன.
வெவ்வேறு திசையில் பயணிக்கும் நான்கு நாயகர்கள் : ‘சில நேரங்களில் சில மனிதர்கள்' சினிமா விமர்சனம்
Published on

மகன் அசோக் செல்வன் மீது அபரிமிதமான பாசம் வைத்திருக்கும் தந்தை நாசர். மகன் வயதில் உள்ள இளைஞர்களுக்கு எல்லாம் திருமணம் ஆகிவிட்டது. தன் மகனுக்கு மட்டும் ஆகவில்லையே என்று கவலைப்படுகிறார். அவருடைய கவலையை போக்கும் வகையில் அசோக் செல்வனுக்கு மணப்பெண் அமைகிறார். திருமண பத்திரிகைகளை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுக்க செல்லும்போது, நாசர் விபத்தில் சிக்கி மரணம் அடைகிறார்.

கே.எஸ்.ரவிகுமார் டைரக்டராகவே நடித்து இருக்கும் இன்னொரு கதை. அவர் மிகப்பெரிய நட்சத்திர டைரக்டராகி விட்டாலும், தன்னடக்கத்துடன் நடந்து கொள்கிறார். அவருக்கு நேர் மாறான சுபாவம் கொண்டவர், மகன் அபிஹாசன். ஆணவம் மிகுந்த தற்கால டைரக்டர். அவருக்கு பாடம் புகட்டுகிறது, நாசரின் மரணம்.

வெளிநாட்டு ஐ.டி. கம்பெனியில் வேலை ..., சொகுசு கார் வைத்திருக்கும் பந்தா... என ஆடம்பர பிரியர் பிரவின் ராஜா, ஆடம்பரத்தை விரும்பாத அவருடைய மனைவி ரித்விகா... இவர்களின் மற்றொரு கதை. குறைந்த சர்வீஸ் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கொடுத்து தன்னை அவமதிக்கும் நிர்வாகத்தை நினைத்து வேதனைப்படும் மணிகண்டனின் கதை... ஆக, இந்த நான்கு கதைகளும் நாசரின் மரணத்தில் இணைகின்றன.

அசோக் செல்வன் கதாபாத்திரமாக மாற முயற்சித்து இருக்கிறார். ஆரம்ப காட்சியில் அவர் ஏன் அத்தனை உரக்க சத்தம்போட்டு பேசுகிறார்? அவருடைய அப்பாவாக, மனைவியை இழந்த நடுத்தர குடும்பத்தின் தலைவராக, மகனின் சுமைகளை தானே சுமக்க முன்வருபவராக- அந்த அப்பா கேரக்டருக்கு உயிரூட்டி இருக்கிறார்.

ரெசார்ட் சூப்பர்வைசர் மணிகண்டனின் ஆதங்கமும், வருத்தமும் இயல்பாக இருக்கிறது. இதேபோல் நாக்கு நுனியில் ஆங்கிலம் பேசுகிற அபிஹாசன், மிக பொருத்தமான தேர்வு. இவருக்கு அப்பாவாக டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார்...அலட்டிக்கொள்ளாத டைரக்டர், பாசத்தை அளவோடு வெளிப்படுத்தும் அப்பா கதாபாத்திரத்தில், ஸ்கோர் செய்து இருக்கிறார். விஷால் வெங்கட் டைரக்டு செய்து இருக்கிறார். திரைக்கதை மெதுவாக நகர்கிறது. வசனம், பல இடங்களில் கைதட்டல் பெறுகிறது. மணிகண்டனும், ஐஸ் பெட்டி கொண்டு வருபவரும் மோதிக்கொள்வது தேவையா?

கதாநாயகிகள் ரியா, அஞ்சு குரியன், ரித்விகா, முன்னாள் நாயகி பானுப்ரியா ஆகியோருக்கு அதிக வேலை இல்லை. நாசரின் நண்பராக இளவரசு. அவரும் அழுது, படம் பார்ப்பவர்களையும் கலங்க வைக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com