

‘அன்பே டயானா’ திரைப்படம் படம் வருகிற 28-ந்தேதி சோனி லிவ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது.
‘ஜமா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் கவனம் பெற்ற பாரி இளவழகன், தற்போது புதிய திரைப்படமான ‘அன்பே டயானா’வை இயக்கி நடித்துள்ளார். இந்தப் படத்தை ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் பேமிலி’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிறுவனம் தயாரிக்கும் ஏழாவது திரைப்படமாக ‘அன்பே டயானா’ உருவானது.
‘அன்பே டயானா’ படத்தில் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ரோஜா மீண்டும் திரையுலகில் நடிப்பிற்கு திரும்பியிருப்பது படத்தின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இவர்களுடன் சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படம், சென்னை பெரம்பூரை மையமாகக் கொண்டு குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் ‘பெரம்பூர் கானா’ பாடல் வைரலானது.
இதனிடையே, ‘அன்பே டயானா’ படம் திரையரங்குகளில் வெளியாகி 25 நாள்கள் நிறைவடைந்ததை ஒட்டி தயாரிப்பாளர் யுவராஜ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இப்ப இருக்கிற சூழலில் ஒரு படம் 25 நாள் தியேட்டரில் ஓடுறதே சாதாரணமான விஷயம் இல்லை. அதுவும் புதுமுகங்களை வைத்து எடுத்த ஒரு சின்ன படம், பெரிய படங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிற நேரத்திலும், தனக்கான ஒரு இடத்தைப் பிடித்து, மக்களோட ஆதரவோடு 25 நாள் தியேட்டரில் இருக்கிறது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமான விஷயம். ஒரு பெரிய படத்தோட வெற்றி நிறைய சாதனைகளை உருவாக்கலாம். ஆனா ஒரு சின்ன படத்தோட வெற்றி, இன்னும் நிறைய பேருக்கு நம்பிக்கையை உருவாக்கும்” என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், ‘அன்பே டயானா’ படம் ஓ.டி.டியில் வெளியாவது குறித்த அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ‘அன்பே டயானா’ படம் வருகிற 28-ந்தேதி சோனி லிவ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது. இப்படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் கண்டு மகிழலாம்.