

ரவி தேஜாவின் ‘இருமுடி கட்டு’ படம் வரும் 18ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரவி தேஜா. இவர் நடிப்பில் உருவான ‘இருமுடி’ படம் கடந்த மாதம் 21ம் தேதி உலகமெங்கும் தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. சிவ நிர்வாணா இயக்கத்தில் ரிலீஸ் ஆன இப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். சாய் குமார், பேபி நக்சத்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் இப்படம் ‘இருமுடி கட்டு’ என்ற பெயரில் வெளியானது.
தொடர்ச்சியாக சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், நடிகர் ரவிதேஜாவுக்கு மீண்டும் வெற்றிப் பாதையை அமைத்துக் கொடுத்துள்ளது ‘இருமுடி’ திரைப்படம். சுமார் ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம், வெளியான சில வாரங்களிலேயே உலக அளவில் ரூ.225 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
குடும்ப உறவுகள் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவான இப்படத்தில் ரவிதேஜா தந்தை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனது மகளின் விருப்பத்திற்காக அய்யப்ப தீட்சை மேற்கொள்ளும் தந்தையை மையமாக வைத்து கதை நகர்கிறது. ரவிதேஜாவின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘இருமுடி’ திரைப்படத்தின் ஓ.டி.டி. வெளியீடு குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் ‘இருமுடி’ படம் வருகிற செப்டம்பர் 18-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பல மொழிகளில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.