சென்னிமலை அருகே மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடியில் கலெக்டர் திடீர் ஆய்வு

சென்னிமலை அருகே மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடியில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் திடீர் ஆய்வில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை அவர் தடுத்து நிறுத்தி சோதனையிட்டார்.
சென்னிமலை அருகே மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடியில் கலெக்டர் திடீர் ஆய்வு
Published on

சென்னிமலை,

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவையொட்டி சென்னிமலை அருகே ஈரோடு- திருப்பூர் மாவட்ட எல்லையில் 6 இடங்களில் போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இரவு, பகலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனை சாவடிகளுக்கு அடிக்கடி கலெக்டர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் திடீரென வந்து ஆய்வு செய்வது வழக்கம்.

இந்த நிலையில், 2-வது முறையாக ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் நேற்று சென்னிமலை அருகே ஈரோடு- திருப்பூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள நொய்யல் சோதனை சாவடிக்கு திடீரென வந்து ஆய்வில் ஈடுபட்டார்.

அப்போது அந்த வழியாக வந்த லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்களை தடுத்து நிறுத்தி அதில் அனுமதிக்கப்பட்ட நபர்களை விட கூடுதலாக யாராவது செல்கிறார்களா என சோதனையிட்டார். சோதனையின் போது ஈரோட்டுக்கு மக்காச்சோளம் ஏற்றி வந்த லாரி ஒன்றில் அனுமதிக்கப்பட்டவர்களை விட விட கூடுதலாக நபர்கள் இருந்ததை அவர் கண்டுபிடித்தார். இதைத்தொடர்ந்து அந்த லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்ய அங்கிருந்த போலீசாருக்கு கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டார்.

அப்போது அங்கிருந்த போலீசாரிடம் கலெக்டர் சி.கதிரவன் கூறும்போது, ஈரோடு மாவட்டத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். அனுமதிக்கப்பட்ட நபர்களை விட கூடுதலாக ஆட்களை ஏற்றி வரும் வாகனங்களை அனுமதிக்க கூடாது. அதேபோல் முக கவசம் அணியாமல் வரும் நபர்களையும் அனுமதிக்க கூடாது. அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அப்போது சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் உள்பட பலர் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com