தினத்தந்தி புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டி
Published on

இடவசதி இல்லாத ஆஸ்பத்திரி

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட திருவண்ணாமலை ரோட்டில் அமைந்துள்ள அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் வெளிப்புற நோயாளிகளின் வருகை தினமும் அதிகமாக உள்ளது. இதனால் நோயாளிகளுக்கு இடப்பற்றாகுறை ஏற்படுகிறது. இங்கு தினமும் பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் போடப்படுவதால் மேலும் இடப்பற்றாகுறை ஏற்படுகிறது. எனவே மாவட்ட மருத்துவ சுகாதார அதிகாரிகள் இந்த இடத்தை ஆய்வு செய்து போதுமான இட வசதி உள்ள இடத்தில் இந்த நகர்ப்புற ஆரம்ப சுகாதார மருத்துவமனை அமைத்தால் பொது மக்களுக்கும் குறிப்பாக கருவுற்ற தாய்மார்களுக்கும் சிகிச்சை பெற வசதியாக இருக்கும். இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்துரு, கிருஷ்ணகிரி.

சீரமைக்கப்படாத நடைபாதை பூங்கா

தர்மபுரி நகரில் உள்ள முக்கிய ஏரிகளில் ராமக்காள் ஏரியும் ஒன்று.இந்த ஏரியின் கரையோர பகுதிகளில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வசதியாக நடைபாதையுடன் கூடிய பூங்கா கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த பூங்கா தற்போது பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள நடை பாதை சேதமடைந்துள்ளன. இதனால் இங்கு நடைபயிற்சி மேற்கொள்வது முற்றிலுமாக தடைபட்டுள்ளது. எனவே இந்த பூங்காவை சீரமைக்கவும், இங்கு உள்ள நடை பாதைகளை சீரமைத்து பொதுமக்கள் இங்கு மீண்டும் நடைபயிற்சி மேற்கொள்ளவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கணேஷ், தர்மபுரி.

பள்ளமான தார் சாலை

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இருந்து ஆத்தூர் செல்லும் சாலையில் ஆங்காங்கே தார் சாலை மிகவும் பள்ளம் பள்ளமாக ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் விழுந்து காயம் அடைகின்றனர். மழைக்காலங்களில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகன் பொதுமக்களின் நலன் நருதி பள்ளமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம்குமார், வாழப்பாடி, சேலம்.

குடிநீர் பிரச்சினை

சேலம் மாவட்டம் திருமலைகிரி கிராமத்தில் வாரம் இரு முறை மட்டுமே குடிநீர் வருகிறது. இப்படி அடிக்கடி அந்த பகுதி மக்கள் குடிநீர் இல்லாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுபற்றி பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஊர்பொதுமக்கள், திருமலைகிரி, சேலம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com