சின்னதாராபுரம் அருகே இருதரப்பினருக்கு இடையே மோதல்; ஒருவர் கைது

சின்னதாராபுரம் அருகே இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவர் கைது செய்யப்பட்டார். தலைமறைவான 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சின்னதாராபுரம் அருகே இருதரப்பினருக்கு இடையே மோதல்; ஒருவர் கைது
Published on

க.பரமத்தி,

டிரைவர்

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே சூடாமணி காலனி பகுதியில் வசிப்பவர் ரமேஷ் (வயது 38), டிரைவர். இவர் கரூர் சுக்காலியூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (37) என்பவரிடம் கடந்த ஆண்டு செலவுக்காக ரூ.30 ஆயிரம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடனை திருப்பி செலுத்தாததால் நேற்று கார்த்திக் மற்றும் அவரது நண்பர்களான அருண், சுரேந்தர் ஆகியோர் பணத்தை கேட்க சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.

ஆஸ்பத்திரியில் அனுமதி

இதில், ரமேஷ், அவரது மனைவி நாகலட்சுமி, தாய் ஆராயி ஆகியோர் கட்டையால் கார்த்திக்கை சரமாரியாக தாக்கியுள்ளனர். பதிலுக்கு கார்த்திக் மற்றும் அவரது நண்பர்களான தொட்டிவாடியை சேர்ந்த அருண் (27), சணப்பிரட்டியை சேர்ந்த சுரேந்தர் (28) ஆகியோர் ரமேஷை தாக்கியுள்ளனர்.

இதையடுத்து, காயம் அடைந்த ரமேஷ் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையிலும், கார்த்திக் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிறையில் அடைப்பு

இந்த சம்பவம் குறித்து ரமேஷ், கார்த்திக் ஆகியோர் கொடுத்த புகார்களின் பேரில் சின்னதாராபுரம் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் இருதரப்பு மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சுரேந்தர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ரமேஷின் மனைவி நாகலட்சுமி, தாய் ஆராயி, கார்த்திக்கின் நண்பர் அருண் ஆகியோர் தலைமறைவாகி உள்ளனர். இவர்களை சின்னதாராபுரம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்தநிலையில், இவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com