அமலாக்கத்துறை அலுவலகம் முன் காங்கிரஸ் போராட்டம்

சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பியதை கண்டித்து மும்பை உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அலுவலகம் முன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமலாக்கத்துறை அலுவலகம் முன் காங்கிரஸ் போராட்டம்
Published on

மும்பை, 

சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பியதை கண்டித்து மும்பை உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அலுவலகம் முன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார், கட்சி தொண்டர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காங்கிரஸ் போராட்டம்

நேஷனல் ஹெரால்டு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இதை கண்டித்து மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன் காங்கிரஸ் கட்சியினர் மாநில தலைவர் நானா படோலே தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது நானா படோலே கூறுகையில், "சுதந்திர போராட்டம் மற்றும் சுதந்திரத்திற்கு பிறகு நாட்டை கட்டமைப்பதில் நேரு-காந்தி குடும்பமே பங்களிப்பை அளித்து உள்ளது. அந்த குடும்பத்தை குறி வைத்தும், அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து களங்கப்படுத்துவால் காங்கிரஸ்காரர்கள் மட்டுமல்ல, சாதாரண மக்களும் காந்தி குடும்பத்திற்கு பின்னால் உள்ளனர். நாங்கள் இந்த அடக்குமுறை அரசுக்கு எதிராக அமலாக்கத்துறை அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபடுகிறோம்" என்றார்.

தள்ளுமுள்ளு

முன்னதாக அமலாக்கத்துறை அலுவலகத்தை நோக்கி தொண்டர்கள் பேரணியாக சென்றனர். அமலாக்கத்துறை அலுவலகத்தை நெருங்கியபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அப்போது போலீசாருக்கும், தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பரபரப்பு நிலவியது.

நாக்பூரில் பேரணி

இதேபோல நாக்பூரில் காங்கிரஸ் கட்சியினர் செமினரி ஹில்ஸ் பகுதியில் இருந்து அமலாக்கத்துறை அலுவலகம் வரை பேரணியாக சென்றனர். மேலும் அவர்கள் அமலாக்கத்துறை அலுவலகம் முன் ராகுல்காந்திக்கு ஆதரவாக பிரமாண்ட போராட்டத்தை நடத்தினர்.

அப்போது அவர்கள் காந்தி குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால், தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com